பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெற மறந்துட்டீங்களா! எப்படி விண்ணப்பிப்பது! தமிழக அரசின் புதிய வழிகாட்டு முறை!
How to Apply late Birth and Death Certificate TNGovt
உரிய நேரத்தில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பிக்காமல், கால தாமதமாக விண்ணப்பிக்க வழிகாட்டு முறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது உங்கள் பகுதியில் இருக்கக்கூடிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், உங்களுக்கு தேவையான பிறப்பு அல்லது இறப்பு சான்றிதழை தாமதமாக பெறுவதற்கான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.
அரசு தரப்பில் உங்களுக்கு தேவையான பிறப்பு மற்றும் இறப்பு குறித்த ஆதாரங்கள் எதுவும் இருக்கிறதா? இல்லையா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள்.
ஒருவேளை அரசு தரப்பில் தரவுகள் இல்லை எனில், அதற்கான சான்றிதழை பெற்று, அதன் பின்னர் பிறப்பு அல்லது இறப்பு சான்றிதழை பெற விண்ணப்பிக்க வேண்டும்.
பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் : மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து பெறப்படும் சான்றிதழ் ஆகியவைகள் ஆதார சான்றிதழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட இந்த சான்றிதழ்கள் எதுவும் இல்லை என்றால், மருத்துவமனை பதிவேடுகளில் உள்ள பிறப்புக்கான விவரங்களை பெற்று அதனை சமர்ப்பிக்கலாம்.
வீட்டில் குழந்தை பிறந்திருந்தால், குடும்பத் தலைவரிடம் இருந்து எழுத்துப்பூர்வமான கடிதத்தை பெற்ற அதனை ஆவணமாக சமர்ப்பிக்கலாம்.
இறப்புச் சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் : இறந்தவர் மற்றும் துணைவரின் ஆதார் அட்டை, இறந்தவரின் வாகன ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பத்துடன் இறப்பை உறுதி செய்யும் வகையில் மயானத்தில் அளிக்கப்படும் ரசீது சீட்டையும் இணைப்பது கட்டாயம்.
சம்பந்தப்பட்ட நபர் மருத்துவமனையில் இறந்திருந்தால் இருந்தால், அங்கு வழங்கப்படும் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
விபத்து, கொலை, தற்கொலை போன்ற நிகழ்வுகளில் சம்மந்தப்பட்டவர் இறந்திருந்தால், காவல் நிலைய முதல் தகவல் அறிக்கை மற்றும் உடற்கூறாய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கியமாக இந்த விண்ணப்பத்துடன் அனைத்து ஆவணங்களையும் இணைத்து, 'நான் தெரிவிக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மை' என்பதை குறிப்பிட்டு சுய உறுதிமொழி இட்ட கடிதத்தையும் விண்ணப்பதாரர் அளிக்க வேண்டும்.
நீங்கள் அளிக்கும் பிறப்பு/இறப்பு சான்றிதழுக்கான விண்ணப்பத்தை வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு செய்வார். பின்னர் கிராம நிர்வாக அலுவலருக்கு ஆவணங்கள் அனுப்பப்படும்.
அதனை அவர் சரிபார்த்து, இரண்டு வாரங்களுக்குள் அதனை வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பி வைப்பார்.
வருவாய் ஆய்வாளர் தனது அறிக்கையை ஒரு வாரத்திற்குள் வட்டாட்சியருக்கு சமர்ப்பிப்பார்.
இப்படியாக நீங்கள் கொடுத்த பிறப்பு/இறப்பு சான்றிதழ் விண்ணப்பம் 60 நாட்களுக்குள் சரிபார்க்கப்பட்டு, அந்த மீதான உத்தரவை வருவாய் கோட்டாட்சியர் பிறப்பிப்பார்.
வருவாய் கோட்டாட்சியர் அளிக்கும் இந்த பிறப்புச் சான்றிதழ் மற்றும் இறப்பு சான்றிதழ் உத்தரவை எதிர்த்து யாரேனும் ஆட்சேபம் தெரிவித்து மனு அளிக்க 60 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்படுகிறது.
அப்படி யாரேனும் மனு அளித்தால், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரை அழைத்து, சாட்சியங்கள் இருந்தால் அவர்களிடமும் விசாரணை நடத்தி, தவறு இருக்கும் பட்சத்தில் பிறப்பு/இறப்பு சான்றிதழுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்பதை மறந்து விடாதீர்கள்.
English Summary
How to Apply late Birth and Death Certificate TNGovt