கோடம்பாக்கத்தில் 16 வயது சிறுவனிடம் பாலியல் அத்துமீறல்; வடபழனி காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் கைது..!
Head Constable Arrested in Kodambakkam for Sexually Abusing a 16 Year Old Boy
சென்னை கோடம்பாக்கத்தில்,16 வயது சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வடபழனி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த தலைமைக் காவலர் வேலப்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த 16 வயது சிறுவன் கடந்த 25-ஆம் தேதி தனது பெற்றோருடன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள உறவினரான குமரேசன் (39) என்பவரது வீட்டுக்கு வந்துள்ளார்.
சிறுவனின் பெற்றோர் 26-ஆம் தேதி சொந்த ஊருக்கு கிளம்பியுள்ளனர். குறித்த சிறுவன் மட்டும் உறவினர் வீட்டில் 02 நாள் தங்கியிருந்து வருவதாக கூறியதால் அவரை மட்டும் அங்கு விட்டுச் சென்றனர். இந்நிலையில், 27-ஆம் தேதி இரவு குமரேசன், தனது நண்பரான வேலப்பன் (35) என்பவரை வீட்டுக்கு அழைத்து வந்து ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.

அப்போது குமரேசன் மதுபோதையில் அங்கேயே படுத்து தூங்கிவிட்ட நிலையில், தலைக்கேறிய போதையில் இருந்த வேலப்பன், அருகில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை எழுப்பி அவரது வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றியுள்ளதோடு, சிறுவனிடம் அத்துமீறி பாலியல் தொந்தரவும் கொடுத்துள்ளார்.
இதனால், பயத்தில் சிறுவன் கத்தி கூச்சலிட்டதோடு, அருகில் இருந்த டிவி ரிமோட்டால் வேலப்பனின் தலையில் தாக்கிவிட்டு வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தப்பியுள்ளார்.

அத்துடன், அந்த சிறுவன் அசோக் நகர் காவல் நிலையத்துக்கு ஓடிச் சென்று, தனக்கு நடந்த சம்பவத்தைக் கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். அப்போது வேலப்பனையும், போதையில் தூங்கிய குமரேசனையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.
மது போதையில் சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வேலப்பன் அசோக் நகர் காவலர் குடியிருப்பில் வசிப்பதும், வடபழனி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Head Constable Arrested in Kodambakkam for Sexually Abusing a 16 Year Old Boy