பயணிகளுக்கு மகிழ்ச்சி! மதுரை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் இனி 16 பெட்டிகளுடன்...!
Happy for passengers Madurai Bengaluru Vande Bharat train will now have 16 coaches
மதுரை ரெயில் நிலையத்திலிருந்து பெங்களூரு கண்டோன்மென்ட் நோக்கி தினமும் பாய்ந்து செல்லும் வந்தே பாரத் ரெயில், அறிமுகமான சில மாதங்களிலேயே பயணிகளின் அபார வரவேற்பைப் பெற்றது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 2ஆம் தேதி முதல் நிரந்தர சேவையாக இயங்கி வரும் இந்த சொகுசு ரெயில், அதன் வேகம், வசதி, தொழில்நுட்ப மேம்பாடு ஆகிய காரணங்களால் பயணிகளின் ‘பிடித்த ரெயில்’ ஆக மாறியுள்ளது.

மேலும், சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட நவீன பெட்டிகளால் ஆன இந்த ரெயிலில், பிற ரெயில்களை விட 3 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் போதிலும், தேவை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் நாடு முழுவதும் கூடுதல் வந்தே பாரத் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன.
அதுமட்டுமின்றி,மதுரை – பெங்களூரு சேவையில் இதுவரை 7 சேர்கார் பெட்டிகளும், 1 எக்ஸிக்யூட்டிவ் பெட்டியும் மட்டும் இயங்கியது. ஆனால் நாளை (வியாழக்கிழமை) முதல், அதிரடி விரிவாக்கம் செய்யப்படுகிறது. புதிய திட்டப்படி, 14 சேர்கார் பெட்டிகளும், 2 எக்ஸிக்யூட்டிவ் பெட்டிகளும் இணைக்கப்பட்டு மொத்தம் 16 பெட்டிகளுடன் ரெயில் இயக்கப்பட உள்ளது.
இதற்கான கூடுதல் பெட்டிகள் கோழிக்கோட்டிலிருந்து மதுரைக்கு கொண்டு வரப்பட்டு, இன்று இணைக்கும் பணிகள் நிறைவேற்றப்பட்டன. மேலும், பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த ‘மேலும் அதிக இட வசதி’ தேவைக்கு இதன் மூலம் தீர்வு கிடைத்துள்ளது.
இதில் தினமும் காலை 5.15 மணிக்கு மதுரையில் புறப்பட்டு மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் சென்று சேரும் இந்த ரெயில், திரும்பும் மார்க்கத்தில் மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.40 மணிக்கு மதுரை வந்தடைகிறது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிக்காக சேவை ரத்து செய்யப்படுகிறது.
இதில் நாமக்கல், சேலம், திண்டுக்கல், திருச்சி, கரூர், கிருஷ்ணராஜபுரம் ஆகிய நிலையங்களில் நிற்கும் இந்த ரெயில், இப்போது கூடுதல் பெட்டிகளுடன் பாயவுள்ளதால், பயணிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
English Summary
Happy for passengers Madurai Bengaluru Vande Bharat train will now have 16 coaches