மதுரைக்குச் சென்றார் ஓ பன்னீர்செல்வம்!  பாஜகவில் இணைவா? அதிமுக சார்பில் அதிகாரமற்ற பிரதிநிதியாக பங்கேற்பா? 
                                    
                                    
                                   Former coordinator of AIADMK Panneerselvam met with BJP National President JP Natta in Madurai
 
                                 
                               
                                
                                      
                                            மதுரை வர உள்ள பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டாவை, அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சந்திக்க உள்ளதாக தகவல்.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை ரத்து செய்து உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து எடப்பாடி கே பழனிச்சாமி தொடந்த மேல்முறையீட்டில் உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்திருந்தது.
இந்த தீர்ப்பின் காரணமாக, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது உறுதியாகிறது. அதே சமயத்தில் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் உறுதியாகிறது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கு நிலவையில் உள்ள நிலையில், நேற்று அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.
நேற்று, தேர்தல் ஆணையத்தில் பொதுக்குழு தீர்மான நகல் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதம் ஆகியவற்றை இபிஎஸ் தரப்பு சமர்ப்பித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பு, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு என எடப்பாடி பழனிசாமி பக்கம் சாதமாக உள்ளதால், தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவும் அப்படியே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ் அதிமுகவின் எந்த அடையாளத்தையும் பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்படலாம்.
இந்நிலையில், இன்று மதுரைக்கு வரவுள்ள பாஜக தேசிய தலைவர் நட்டாவை ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பதற்காக மதுரை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே தேனி மாவட்ட பாஜக பிரதிநிதிகள் பன்னீர்செல்வதிற்கு ஆதரவாக உள்ள நிலையில், இன்று மதுரையில் ஜே.பி நட்டாவை ஓபிஎஸ் சந்திப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
ஒருவேளை பன்னீர்செல்வம் பாஜகவில் இணைகிறாரா? என்ற கேள்வியும், அதிமுகவின் அதிகாரமற்ற பிரதிநிதியாக சந்திக்க உள்ளாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எப்படி பார்த்தாலும் ஓ பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் என்பது, நடைபெறவிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் முடிவாகிடும் என்று, அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
                                     
                                 
                   
                       English Summary
                       Former coordinator of AIADMK Panneerselvam met with BJP National President JP Natta in Madurai