வால்பாறை அருகே வனத்தீ: 4 ஏக்கர் செடி, கொடி, மரங்கள் எரிந்து சேதம்...!
Forest fire near Valparai 4 acres plants bushes and trees destroyed
கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் கடும் குளிர், பனிப்பொழிவு, பனிமூட்டம் நிலவி வந்தாலும், அதிகாலை முதல் பிற்பகல் 2 மணி வரை கடுமையான வெயில் வாட்டி எடுக்கிறது. இதன் விளைவாக, வனப்பகுதிகள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான காடுகளில் உள்ள செடி, கொடி, புற்கள் முழுமையாக காய்ந்து வறண்டு கிடக்கின்றன.

குறிப்பாக, ரொட்டிக்கடை அடுத்த பாறைமேடு பகுதியில் உள்ள காடுகளில் பெருமளவில் புற்கள் வெயிலுக்கு கருகிய நிலையில் காணப்பட்டன.இந்த நிலையில், நேற்று காலை பாறைமேடு காட்டுப்பகுதியில் உள்ள காய்ந்த புற்களில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
பலத்த காற்றின் தாக்கத்தால், தீ மளமளவென ஏக்கர் கணக்கில் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் பாறைமேடு பகுதியிலிருந்து லோயர் பாரளை எஸ்டேட் மற்றும் தேன்மலை குறுக்கு பகுதிகள் வரை பரந்த வனப்பகுதிகளில் தீப்பற்றி எரிந்தது.
இந்த தகவலறிந்த வால்பாறை வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அருகிலுள்ள முக்கிய வனப்பகுதிகளுக்கு தீ பரவாமல் இருக்க, தீ அணைக்கும் பணியில் அவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் தீப்பிடித்துள்ளதால், உடனடியாக தீயை முழுமையாக அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் 4 ஏக்கர் அளவிலான பல்வேறு செடி, கொடி, மரங்கள் எரிந்து சாம்பலாகின.
வனத்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், பாறைமேடு வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் அல்லது உள்ளூர் மக்கள் புகைப்பிடித்துவிட்டு எச்சரிக்கையின்றி சிகரெட் துண்டுகளை காட்டுப்பகுதியில் வீசியதே தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக வனத்துறையினர் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Forest fire near Valparai 4 acres plants bushes and trees destroyed