பகல்ல நல்லா இருக்கு... ஆனா நைட்ல மட்டும் ஏன் கரண்ட் போகுது...? - மின்வாரியத் தலைவர் கொடுத்த விளக்கம்...!
fine during day but why power outage only at night Explanation given by Electricity Board Chairman
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மைக் காலமாக மீண்டும் மின்தடை பிரச்சினை தீவிரமடைந்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பல மணி நேரம் நீடிக்கும் மின்தடையை கண்டித்து பல்வேறு இடங்களில் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில பகுதிகளில் மின்வாரிய அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டு, உடனடி தீர்வு கோரி மக்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.இரவுநேர உறக்கத்தை சீர்குலைக்கும் மின்தடையால் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் பணியாளர்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தூக்கமின்மை மற்றும் வெப்பத்தின் தாக்கத்தால் மனஉளைச்சல் அதிகரித்துள்ளதாகவும் மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் மின்தடை தொடர்பாக மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.அப்போது அவர் பேசுகையில், இரவு நேரங்களில் சில பகுதிகளில் மின்தடை ஏற்படுவது மறுக்க முடியாத உண்மை என்றும், அதனை மறைக்க மின்வாரியம் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்த பிரச்சினை மின்சார உற்பத்தி பற்றாக்குறையால் உருவாகவில்லை என்றும், மாறாக மின் பகிர்மான அமைப்புகளில் உருவாகும் தொழில்நுட்ப நெருக்கடிகளே இதற்குக் காரணம் என்றும் விளக்கமளித்தார்.இரவுகளில் மின்சாரப் பயன்பாடு திடீரென அதிகரிப்பதாலும், மின்மாற்றிகள் மற்றும் மின்கம்பிகள் தாங்கும் அளவை மீறிய சுமையை எதிர்கொள்வதாலும் தற்காலிக தடங்கல்கள் உருவாகுகின்றன என தெரிவித்தார்.
மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மக்களின் வீடுகள் வரை மின்சாரத்தை கொண்டு செல்லும் பகிர்மான கட்டமைப்புகளில் ஏற்படும் அழுத்தமே தற்போதைய சிக்கலின் முக்கிய காரணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரச்சினை அதிகம் காணப்படும் பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், புதிய மின்மாற்றிகள் அமைத்தல், பழைய மின்கம்பிகளை மாற்றுதல் மற்றும் பகிர்மான வசதிகளை வலுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மக்கள் எதிர்பார்க்கும் தடையற்ற மற்றும் சீரான மின்விநியோகத்தை உறுதி செய்வதற்காக மின்வாரியம் முழு வேகத்தில் பணியாற்றி வருவதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
English Summary
fine during day but why power outage only at night Explanation given by Electricity Board Chairman