நடுத்தெருவில் குடும்பிபிடி சண்டை... கிராமமே களைகட்டிய சம்பவம்.. ஊ.ம.த - ஊ.ம.து.த லடாய்.!
Erode DMK and ADMK Panchayat Raj Woman Fight Police Investigation
ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் நடுத்தெருவில் சண்டையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை பாலதொழுவு ஊராட்சி மன்ற தலைவர் தங்கமணி. இவர் திமுகவைச் சார்ந்தவர். ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருப்பவர் சத்யபிரியா. இவர் அதிமுகவை சார்ந்தவர் ஆவார். இவர்கள் இருவரும் வெவ்வேறு கட்சியைச் சார்ந்தவர்கள் என்பதால், பஞ்சாயத்தை நிர்வகிப்பதில் மோதல் போக்கு இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், இவர்களுக்குள் ஏற்பட்டு இருந்த பிரச்சனை காரணமாக, கிராம மக்களின் பிரச்சனையை தீர்க்காமல் மௌனம் காட்டி வந்த நிலையில், அத்திக்கடவு - அவினாசி திட்டத்தில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், ஊராட்சிக்கு குடிநீர் வழங்கும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், பாலதொழுவு பகுதியில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க தமிழக அரசிடமிருந்து ரூபாய் 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை தலைவர் தங்கமணி பெற்றுக் கொண்ட நிலையில், இந்த தொகையை கொண்டு போர்வெல் அமைக்க துணைத் தலைவரின் கையொப்பமும் வேண்டும் என்பதால், சத்யாவிடம் கையெழுத்திட தங்கமணி கேட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு செல்லாமல் இருந்த துணைத்தலைவர் சத்யபிரியா, நிர்வாகிகளை பணிகள் செய்ய விடாமல் தொந்தரவு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், போர்வெல் அமைப்பதற்கான கையொப்பம் போடாமல், தட்டிக்கழிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
பொறுத்து பார்த்த தங்கமணி சம்பவத்தன்று சத்யபிரியாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம், உங்களுக்கு குடிநீர் கிடைக்காமல் இருப்பதற்கு சத்யபிரியா தான் காரணம் என்று கூறவே, ஆத்திரமடைந்த சத்யபிரியா தங்கமணியின் கன்னத்தில் அடிக்க, பதிலுக்கு தங்கமணியும் தாக்கியுள்ளார்.
இதனால் சாலையில் ஒருவரை ஒருவர் வசைபாடி மாறி மாறி அடித்துக் கொண்ட நிலையில், அங்கிருந்த கிராம மக்கள் சிறிது நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன்பின்னர், இருவரும் தங்கள் தரப்பில் இருந்து புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் இருவரின் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Erode DMK and ADMK Panchayat Raj Woman Fight Police Investigation