தேர்தல் ஆணையம்,பாரதிய ஜனதா கட்சியின் அடிமை... முத்தரசன் கடும் தாக்கு!
Election Commission slave of Bharatiya Janata Party Mutharasans severe attack
தேர்தல் ஆணையம் ஜனநாயக ரீதியில் சுதந்திரமாக செயல்பட வேண்டும் அவ்வாறு இல்லை என்றால் ஜனநாயகத்திற்கே மிகப்பெரிய ஆபத்து என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கிறது என்று முத்தரசன் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், 25வது மாவட்ட மாநாடு நடைபெற்றது.சட்டமன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும்,தளி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான, டி.இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா முத்தரசன், மாநிலங்களவை உறுப்பினர் சுப்பராயலு உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்றனர். தொடர்ந்து இருநாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து சுமார் 3000 மேற்பட்ட தொண்டர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இரா முத்தரசன் தெரிவிக்கையில்,தேர்தல் ஆணையம் என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தால் சுதந்திரமாக அமைக்கப்பட்ட மகத்தான அமைப்பு. சுதந்திரமாக செயல்பட வேண்டிய அந்த அமைப்பை பாரதிய ஜனதா கட்சி சீர்குலைத்துவிட்டது. பாரதிய ஜனதா கட்சியின் அடிமை அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறி இருக்கக்கூடிய மிகவும் மோசமான, கவலைக்குரிய செய்தி அது என்றும் பீகார் மாநிலத்தில் 26 லட்சம் வாக்காளர்களை நீக்கிவிட்டார்கள் . அதேபோல தமிழ்நாட்டிலும் நீக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதேசமயம் பீகார் மாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்து தமிழகத்திற்கு வந்த அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களை எல்லாம் வாக்காளர்களாக சேர்ப்பதற்கு மோசமான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் தேர்தல் ஆணையம் ஜனநாயக ரீதியில் சுதந்திரமாக செயல்பட வேண்டும் அவ்வாறு இல்லை என்றால் ஜனநாயகத்திற்கே மிகப்பெரிய ஆபத்து என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கிறது என்றும் கூறினார்.
English Summary
Election Commission slave of Bharatiya Janata Party Mutharasans severe attack