தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Eid festival celebrations in full swing across Tamil Nadu
தமிழகம்,புதுச்சேரியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். பக்ரீத் பண்டிகை கொண்டாடிய முஸ்லிம்கள், ஏழை மக்களுக்கு குர்பானியாக ஆடு, மாடு உள்ளிட்டவற்றின் இறைச்சியை தானமாக அளித்தனர்.
இறைவனின் தூதரான இப்ராஹீமின் தியாகத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய 12-வது மாதமான துல் ஹஜ்ஜின் 10-வது நாளில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது ஹஜ் பெருநாள் மற்றும் தியாகத் திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தப்படியாக இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக உள்ள இந்த பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் இன்று இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று காலையிலேயே இஸ்லாமியர்கள் நாடு முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளையும் பரிமாறி உற்சாகம் அடைந்தனர்.
திறந்தவெளி மைதானங்கள் மற்றும் மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு மைதானங்களில் நடந்த தொழுகையிலும் இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.டெல்லியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பாராளுமன்றத் தெருவில் உள்ள ஜமா மசூதியில் மக்கள் தொழுகை நடத்தினர்.
இதேபோல் தமிழகம்,புதுச்சேரி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், பீகார் மாநிலம் பாட்னா, உத்தரபிரதேச மாநிலம், ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பாளையம் ஜும்ஆ மசூதியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். பக்ரீத் பண்டிகை கொண்டாடிய முஸ்லிம்கள், ஏழை மக்களுக்கு குர்பானியாக ஆடு, மாடு உள்ளிட்டவற்றின் இறைச்சியை தானமாக அளித்தனர்.
English Summary
Eid festival celebrations in full swing across Tamil Nadu