அவதூறு, வதந்திகளை பரப்ப வேண்டாம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
Do not spread slander and rumors Chief Minister MK Stalins request
கரூரில் நடந்தது பெரும் துயர சம்பவம் தொடர்பாக அவதூறு, வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்,
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியதாவது,கரூரில் நடந்த சம்பவம் பெரும் துயரம், கடும் துயரம், இதுவரை நடக்காத துயரம், இனி நடக்கக்கூடாத துயரம்.
மருத்துவமனைக்கு நான் நேரில் சென்று கண்ட காட்சிகள் என் கண்களை விட்டு அகலவில்லை. நான் கனத்த மனநிலையிலும், துயரத்திலும்தான் இன்னும் உள்ளேன். உடனடியாக அன்று இரவே கரூருக்கு சென்றேன்.
குழந்தைகள், பெண்கள் என 41 உயிர்களை நாம் இழந்துள்ளோம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அரசு சார்பில் முழு சிகிச்சை வழங்கி வருகிறோம்.
நடந்த சம்பவங்களுக்கான முழுமையான, உண்மையான காரணத்தை ஆராய முன்னாள் நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.விசாரணை ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில் தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்பதை உறுதியளிக்கிறேன்
இதற்கிடையே, சமூகவலைதளங்களில் சிலர் பரப்பும் வதந்திகளையும், பொய் செய்திகளையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் என்னை பொறுத்தவரை அவர்கள் அனைவரும் நமது தமிழ் உறவுகள். எனவே விஷமத்தனமான செய்திகளை தவிர்க்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தும்போது இனிவரும் காலங்களில் எத்தகைய பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை வகுக்க வேண்டியது நம் அனைவரது கடமை.
அரசியல் நிலைப்பாடுகள், கொள்கை முரண்பாடுகள், தனிமனித பகைகள் என அனைத்தையும் விலக்கி வைத்துவிட்டு அனைவரும் மக்கள் நலனுக்காக சிந்திக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாடு எப்பொழுதுமே நாட்டிற்கு பலவகைகள் முன்னோடியாக இருந்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி எந்த காலத்திலும் நடக்காமல் தடுக்க வேண்டியது நம் அனைவரது கடமைஇவ்வாறு அவர் கூறினார்.
English Summary
Do not spread slander and rumors Chief Minister MK Stalins request