இதெல்லாம் பாஜக செய்யும் வேலை! பா.ரஞ்சித்துக்கு திமுக தரப்பில் கடும் கண்டனம்!
DMK Saravanan reply to Pa Ranjith
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இயக்குநர் பா.ரஞ்சித், தலித் மக்களின் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா? என்று திமுகவையும், அதன் தலைவர் முக ஸ்டாலினையும் நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்த அவரின் அந்த பதிவில், "திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன். அந்த ஆதங்கத்திலேயே இந்த கேள்விகளை முன் வைக்கிறேன். வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா?" என்று இயக்குநர் பா.ரஞ்சித் எழுப்பி உள்ளார்.
இந்நிலையில், திமுகவின் செய்தி தொடர்பாளர் சரவணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "திமுகவை தலித் மக்களின் நலன்களுக்கு எதிரான கட்சி என கட்டமைக்க பாஜக வெகு காலமாக முயன்று வருகிறது. அதிலே படுதோல்வியைத் தான் சந்தித்துக் கொண்டிருக்கிறது, சந்திக்கவும் போகிறது.

அண்ணன் ஆம்ஸ்டிராங்க் அவர்கள் கொலை என்ன காரணத்திற்காக நடந்திருக்கிறது, யாரெல்லாம் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் போதே, திமுகவின் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார் அண்ணன் பா. ரஞ்சித் அவர்கள்.
அண்ணன் பா. ரஞ்சித் அவர்களுக்கு முக்கிய கேள்வி?
இந்த வழக்கில் விசாரண முடியவில்லை, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை, அதற்குள் போலிசார் கொலைக்கு இதுதான் காரணம் என முடிவு செய்துவிட்டார்களா என எந்த அடிப்படையில் கேள்வி எழுப்புகிறீர்கள்? விசாரணையின் போக்கை வெளியில் சொல்ல மாட்டார்கள், சொல்லக் கூடாது என்ற அடிப்படை தெரியாதவரா தாங்கள்?

ஒடுக்கப்பட்டவர்களின் விடி வெள்ளியாய் செயல்படும் திமுகவின் மீது தலித் மக்களின் நலனுக்கெதிரானவர்கள் என்ற போலி பிம்பம் இந்த சம்பவத்திற்கு பின்னர் பல மடங்கு வீரியத்துடன் சமூக வலைத்தளங்களில் கட்டமைக்கப்படுகிறதே அது தங்களுக்கு தெரியவில்லையா? அந்த போலி பிம்பத்தை உறுதிப்படுத்தவே இந்த பதிவா?
தமிழ் நாட்டின் காவல்துறை சிறப்பான அமைப்பு. இந்த வழக்கில் எல்லா குற்றவாளிகளையும் கண்டறிந்து, அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தரக்கூடிய வல்லமை பெற்றவர்கள்" என்று சரவணன் பதிலடி கொடுத்துள்ளார்.
English Summary
DMK Saravanan reply to Pa Ranjith