அதிமுக எம்.எல்.ஏ கடம்பூர் ராஜூவை பாராட்டிய திமுக எம்.பி கனிமொழி..!!
DMK MP Kanimozhi praises AIADMK MLA Kadampur Raju
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி.ராஜநாராயணன் நினைவு போற்றும் வகையில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 1.50 கோடி ரூபாய் செலவில் முழு உருவ சிலையுடன் நினைவு அரங்கம் கட்டப்பட்டது.
அதனை கடந்த டிசம்பர் 2ம் தேதி முதல்வர் ஸ்டாலின் காணொலி வழியே திறந்து வைத்தார். அவருடன் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் கோவில்பட்டி அ.தி.மு.க எம்.எல்.ஏவும் முன்னாள் செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய அவர் "நினைவரங்கம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அதை முதல்வர் திறந்து வைத்ததற்கு நன்றி. நானும் இந்த மண்ணுக்கு சொந்தக்காரன் என்பதால் இந்த விழாவில் பங்கேற்பதற்கு முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமியிடம் அனுமதி கேட்டேன்.
தமிழின் பெருமையை தமிழர்களின் பண்பாட்டை காத்ததற்கு பெருமை சேர்க்கும் விழாவில் பங்கேற்க வேண்டும் எனக் கூறி அனுமதி தந்தார். எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நுாற்றாண்டு விழாவை தமிழகம் முழுதும் கொண்டாட வேண்டும். அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட அறிவிக்க வேண்டும்" என பேசினார்.
தி.மு.கவின் துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு அவர் எழுதிய புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து விழாவில் பேசிய கனிமொழி ''பல எழுத்தாளர்களுக்கு நாம் செய்ய வேண்டிய மரியாதை செய்யாமல் தவறிய சூழல் இருந்துள்ளது. கட்சி பேதங்களை தாண்டி இவ்விழாவில் பங்கேற்ற கடம்பூர் ராஜுவுக்கு அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என பாராட்டி பேசினார். எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவு அரங்கம் விழா கல்வெட்டில் கடம்பூர் ராஜு பெயர் இடம் பெறாமல் இருந்தது. பின்னர் சுட்டிக்காட்டப்பட்டதால் அவரது பெயர் சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
DMK MP Kanimozhi praises AIADMK MLA Kadampur Raju