#செங்கல்பட்டு || கூலிக்கு பதில் போலி மது.. பின்னணியில் திமுக நிர்வாகி.. வெளியான திடுக்கிடும் தகவல்..!!
DMK admin connected to Chengalpattu fake liquor case
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே பேரப்பாக்கத்தில் போலி மது அருந்தி 6 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இவர்கள் அனைவரும் டாஸ்மாக்கில் விற்கப்பட்ட போலி மது அருந்தியதால் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்பொழுது இந்த விவகாரத்தில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளது. பிரபல தனியார் செய்தி ஊடகத்திற்கு உயிரிழந்தவர்களில் ஒருவரான வசந்தா என்பவரின் மகன் ஆறுமுகம் பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர் "அம்மாவாசை எனும் ஒருவர் அவர்கள் வீட்டில் இருக்கும் மரங்களை வெட்ட என் மாமாவை வேலைக்கு கூப்பிட்டு இருந்தாரு. என் மாமாவும் அவங்க வீட்டுக்கு போய் அந்த மரத்த வெட்டினதும், அவரிடம் கூலி கேட்டு இருக்கிறார். ஆனால் அம்மாவாசை எங்க மாமாவிடம் என்கிட்ட பணமில்லை சரக்கு தான் இருக்கு இதை கூலியா வைத்துக்கொள் என மாமாகிட்ட பாட்டில தந்து இருக்காரு.
எங்க மாமாவும் அத்தை வீட்டிற்கு கொண்டுவந்தும், என் மாமா, அக்கா அஞ்சலை, அம்மா வசந்தா மூன்று பேரும் அந்த மதுவை குடித்தார்கள். குடித்த சிறிது நேரத்துல ஒவ்வொருவராக மயங்கி விழுந்து இறந்துட்டாங்க. இவங்க இறந்ததற்கு அம்மாவாசை தந்த கலப்பட மது தான் காரணம்" என தனியா செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் கலப்பட மது பாட்டில் வழங்கிய அமாவாசை என்ற நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அமாவாசை குறித்து விசாரணை நடத்தியதில் அவர் சித்தாமூர் திமுக ஒன்றிய கவுன்சிலர் நாகப்பனின் சகோதரர் என்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. திமுக கவுன்சிலரின் சகோதரரே போலி மதுபானத்தை விற்பனை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
DMK admin connected to Chengalpattu fake liquor case