வாக்கு எண்ணிக்கை கவுண்டவுன் ஸ்டார்ட்...! - நெல்லையில் 225 அலுவலர்கள் அதிரடி நியமனம்...!
Countdown vote counting starts 225 officials appointed Nellai
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலைத் தொடர்ந்து நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை பணிகளுக்கான முன்னேற்பாடுகள் திருநெல்வேலியில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கணினி குலுக்கல் (Randomization) முறையின் மூலம் அலுவலர்கள் ஒதுக்கீடு செய்யும் முதல்கட்ட நடவடிக்கைகள் நேற்று நடைபெற்றன.

இந்த பணிகள், மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சுகுமார் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் முறையாக மேற்கொள்ளப்பட்டன.கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து, மாவட்டத்தின் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் வழியாக 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் பின்வருமாறு:
வாக்கு எண்ணிக்கை மேஜைகள்:
ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் மற்றும் கூடுதலாக 3 இருப்பு மேஜைகள் தயார் நிலையில் அமைக்கப்பட்டுள்ளன.
அலுவலர்கள் ஒதுக்கீடு:
ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 17 மேற்பார்வையாளர்கள், 17 உதவியாளர்கள், 17 நுண்பார்வையாளர்கள் என 51 அலுவலர்கள் வீதம், மொத்தம் 5 தொகுதிகளுக்காக 255 பேர் முதல்கட்டமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தபால் வாக்கு எண்ணிக்கை:
தபால் வாக்குகளை சீராக கணக்கிட ஒவ்வொரு தொகுதிக்கும் 7 மேஜைகள் மற்றும் ஒரு இருப்பு மேஜை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் 8 நுண்பார்வையாளர்கள், 8 மேற்பார்வையாளர்கள், 8 நிலை-1 உதவியாளர்கள், 8 நிலை-2 உதவியாளர்கள் என 32 பேர் வீதம், மொத்தம் 160 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஒதுக்கீட்டு செயல்முறையில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, தேர்தல் தொடர்பான நேர்முக உதவியாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மற்றும் அனைத்து தொகுதி தேர்தல் அலுவலர்களும் கலந்து கொண்டு பணிகளை விரைவுபடுத்தினர்.
English Summary
Countdown vote counting starts 225 officials appointed Nellai