16 குடும்பங்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பாக பரிசீலினை..முதலமைச்சர் ரங்கசாமியுடன் திமுக MLA ஆலோசனை!
Considering granting pattas to 16 families DMK MLA meets CM Rangasamy
திப்புராயப்பேட்டை லெப்ரசி மாற்றுத்திறனாளி குடியிருப்பில் வசிக்கும் 16 குடும்பங்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் கழக அமைப்பாளர் சிவா அவகளுடன் சென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து பேசினார்.
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட திப்புராயப்பேட்டை லாசர் கோவில் வீதியில் உள்ள நிக்கோல் துரியோ குடியிருப்பில், கடந்த 48 ஆண்டுகளாக லெப்ரசி மாற்றுத்திறனாளிகள் சார்ந்த 16 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இன்றுவரை தனிநபர் சொத்தாக பட்டா பெற்றிருக்கவில்லை.
இந்நிலையில், பட்டா வழங்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள், உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். இந்த குடியிருப்பு கடந்த 25 ஆண்டுகளாக எந்தவொரு பராமரிப்பும் இல்லாமல் இருந்து வருகின்றது.
இதைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் நகராட்சி, பொதுப்பணி துறை, கடலோர அறிவியல் மற்றும் ஆராய்ச்சி அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு தடையில்லா சான்றிதழ்களை பெற்று வந்தார்.
முற்றிலும் முடியும் தருவாயில், சர்வே இயக்குநர் செந்தில் அவர்களிடம் இலவச வீட்டு மனை பட்டா தொடர்பான மனுவின் நிலை குறித்து பதில் கடிதம் வந்தது. அதில், குறித்த குடியிருப்பு கடற்கரையிலிருந்து 27.5 மீட்டர் தொலைவில் உள்ளதாகவும், மாண்புமிகு உச்சநீதிமன்றம் மற்றும் மதராஸ் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், இவ்வாறான இடங்களில் பட்டா வழங்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், நீர்நிலைகள் மற்றும் நீர் வழிகளில் பட்டா வழங்கக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள், மாநில திமுக கழக அமைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான சிவா அவர்களுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சட்ட மன்ற அலுவலகத்தில் பொதுமக்களை அழைத்து நேரில் சந்தித்து, பட்டா வழங்க வழிசெய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். கோரிக்கை ஏற்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் உயர்திரு.குலோத்துங்கன் அவர்களை அங்கு நேரில் சென்று பார்வையிட்டு தீர்வு அளிக்கும்படி கூறினார், உடன் தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் ராஜி, கிளை செயலாளர்கள் சந்துரு, ராகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
English Summary
Considering granting pattas to 16 families DMK MLA meets CM Rangasamy