ஆசிரியர் பயிற்சி வகுப்பினால் பள்ளிகளில் வகுப்புகள் ரத்து..!
Classes canceled in schools due to teacher training course
ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் இருக்கும் நிலையில், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, கடந்த மாதம் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10 வரை,சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. இப்போட்டியின் துவக்க விழாவிற்கு, பிரதமர் மோடி வந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கு விடுமுறைக்கு மாற்றாக, இந்த நான்கு மாவட்டங்களில், இன்று அரசு அலுவலகம், பள்ளி, கல்லுாரிகளுக்கு வேலைநாளாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இன்று பள்ளிக்கல்வித் துறை, அரசு பள்ளி ஆசிரியர்களை சி.ஆர்.சி., என்ற பயிற்சி வகுப்புக்கு வர வேண்டும் என அறிவித்தது. இதனால், பள்ளிகளில் பாடம் எடுக்க வேண்டுமா; பயிற்சிக்கு வர வேண்டுமா என, ஆசிரியர்கள் திண்டாட்டத்தில் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து, சென்னை முதன்மை கல்வி அலுவலகம், அரசு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில், ஆசிரியர் பயிற்சி வகுப்பு உள்ளதால், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகள் உண்டு என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் முதன்மை கல்வி அலுவலகம் இது குறித்து, பொது அறிவிப்பு ஒன்றும் வெளியிடவில்லை.
English Summary
Classes canceled in schools due to teacher training course