இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் - ஆளுநருக்கு முதல்வர் கடிதம்.!
chief minister mk stalin write letter to governor for senthil balaji issue
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் - ஆளுநருக்கு முதல்வர் கடிதம்.!
தமிழகத்தின் மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். இந்த நிலையில், அமைச்சரவையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கு முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டசபையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஆளுநர் இந்த உத்தரவை பிறப்பித்து இருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதவி நீக்கத்திற்கு தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க. உள்ளிட்ட பல்வேறு கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இதனால், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவை கவர்னர் ரவி நிறுத்தி வைத்துள்ளார் என்று ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக, ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "இது தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்க, உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார்" என்றுத் தெரிவித்துள்ளார்.
இந்த கடிதம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அரசு தலைமை வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதன் முடிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு பதில் கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், "இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவார்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதம் ஆளுநர் மாளிகைக்கு சென்றடைந்தது.
English Summary
chief minister mk stalin write letter to governor for senthil balaji issue