சென்னை முகப்பேரில் அதிர்ச்சி: படுக்கையில் பிணமாக கிடந்த தலைமை மருத்துவர்: போலீசார் விசாரணை..!
Chief doctor found dead in bed in Chennai
சென்னை முகப்பேர் பகுதியில் தனியார் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஒருவர், வீட்டின் படுக்கை அறையில் பிணமாக கிடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர், மாரடைப்பால் இறந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
51 வயதான டாக்டர் பழனிவேல் சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள பிரபல தனியார் கண் மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வந்தவர். இவரது மனைவி கடந்த 06 வருடத்துக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துள்ள நிலையில், இவர்களுக்கு 02 மகள்கள் உள்ளனர். அவர்கள், பெங்களூரு மற்றும் அரியலூரில் படித்து வருகின்ற நிலையில், பழனிவேல் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

நேற்றிரவு இரு மகள்களும் வழக்கம் போல் தந்தைக்கு போன் செய்துள்ளனர். அதன் பின்னர் படுக்கைக்கு சென்றுள்ளார். காலையில், பெங்களுரில் படித்து வரும் மகள், பழனிவேலுக்கு போன் செய்துள்ளார். ஆனால், அவர் எடுக்கவில்லை. அதனால், பலமுறை போன் செய்தும் எடுக்காததால் பயத்தில் பக்கத்தில் உள்ளவர்களுக்கு போன் செய்து விவரத்தை கூறியுள்ளார்.
உடனடியாக அவர்கள் விரைந்து சென்று பழனிவேல் வீட்டின் கதவை தட்டிய போது அவர் திறக்கவில்லை. வெகு நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் அவர்கள் ஜன்னல் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது, பழனிவேல் எந்தவித அசைவும் இன்றி படுக்கையறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் நொளம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது படுக்கையில் பழனிவேல் இறந்து கிடந்தார். பின்னர் இரு மகள்களுக்கும், தந்தை இறந்த தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர், உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
முதல்கட்ட விசாரணையில் அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் பிரேத பரிசோதனை கிடைத்த பிறகுதான் மருத்துவர் எப்படி இறந்தார் என்று தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Chief doctor found dead in bed in Chennai