'அரசன்' படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்...! - சிலம்பரசன் விவகாரத்தில் டி.ராஜேந்தர் கடும் கேள்வி...!
Arasan shooting suddenly stopped T Rajendar tough question Silambarasan issue
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படம் தற்போது கோலிவுட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது. கலைபுலி தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து வருகிறார். வடசென்னை பின்னணியில் கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் சமுத்திரகனி, பிரியங்கா மோகன், அமீர், கிஷோர், ஆண்ட்ரியா ஜெரெமையா, யோகி பாபு, விக்ராந்த், சைத்ரா ஆர்ச்சர் உள்ளிட்டோர் இணைந்து நடித்துவருகின்றனர்.மேலும், படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், திடீரென அது நிறுத்தப்பட்ட சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதன் பின்னணியில் உருவான சர்ச்சை குறித்து, நடிகரும் டி.ராஜேந்தர் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், “நான் ஒரு தந்தையாகவோ அல்லது ஒரு நடிகனுக்காகவோ பேச வரவில்லை. தயாரிப்பாளர் சங்கமும் தொழிலாளர் அமைப்புகளும் நியாயத்திற்கும் அறத்திற்கும் உட்பட்டு செயல்பட வேண்டும் என்பதைக் கூறுவதற்காகவே பேசுகிறேன்” என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஐசரி கணேஷ் தயாரித்த ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பாக ஏற்பட்ட வழக்கை குறிப்பிட்ட அவர், “அந்த வழக்கில் சிலம்பரசனின் சார்பில் நான் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினேன். அந்த வழக்கில் சட்டப்படி எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது.
அடுத்த படத்திற்காக வழங்கப்பட்ட முன்பணம் சிலம்பரசனுக்கே உரியது என நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. அந்த தீர்ப்பின் நகல் எங்களிடம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பழைய பிரச்சினைகளை காரணம் காட்டி தற்போது நடைபெற்று வந்த ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பை தயாரிப்பாளர் சங்கமும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமும் இணைந்து நிறுத்தியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் சாடியுள்ளார்.
“நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கிய நிலையில், சட்டத்தை தாங்களே கையில் எடுத்துக்கொண்டு இப்படியான நடவடிக்கை எடுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “ஒரு தயாரிப்பாளருக்காக தயாரிப்பாளர் சங்கம் குரல் கொடுக்கும்போது, ஒரு நடிகனுக்காக நடிகர் சங்கம் ஏன் முன்னிலை எடுக்கக் கூடாது? இந்த விவகாரத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் உடனடியாக தலையிட்டு, சிலம்பரசனுக்கு உரிய நியாயத்தைப் பெற்றுத்தர வேண்டும். பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு கிடைக்க வேண்டும்” என டி.ராஜேந்தர் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Arasan shooting suddenly stopped T Rajendar tough question Silambarasan issue