சென்னையில் போலீசார் அதிரடி சோதனை | 75 வாகனங்கள் பறிமுதல்!
Chennai Police raid 2023
நேற்று ஒரே நாளில் போக்குவரத்து விதிமீறல் காரணமாக சென்னையில் 75 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் குற்றங்களை தடுக்கவும், குற்ற வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்கவும் போலீசார் தொடர் வாகன சோதனை உள்ளிட்ட பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சென்னையில் பல பகுதிகளில் 'காவல்துறை, பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம்' நடத்தப்பட்டு, காவல்துறை சார்பில் பல்வேறு அறிவுரைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு போலீசார் எடுத்துரைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று சென்னையில் பெருநகரில் சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த வாகன சோதனையில், 5,311 இருசக்கர, மூன்று சக்கர, இலகுரக வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டது.

மது போதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 12 வழக்குகளும், ஆவணங்கள் இல்லாமல் வாகனங்கள் இயக்கியது மற்றும் போக்குவரத்து வீதிகளை மீறியது தொடர்பாக 63 வழக்குகளும் என மொத்தம் 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 75 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.