சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் மேம்பாட்டு பணிகள்: 45 நாட்கள் மாற்று அட்டவணை…40 புறநகர் ரெயில்கள் ரத்து...! - பயணிகள் அவதி
Chennai Egmore Railway Station Development Works 45 days change schedule 40 suburban trains cancelled Passengers suffer
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் விரிவான மேம்பாட்டு மற்றும் மறுசீரமைப்பு பணிகளின் காரணமாக, கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு புறநகர் வழித்தடத்தில் ஏப்ரல் 5-ம் தேதி வரை சுமார் 40 மின்சார ரெயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் பணிகள் தீவிரமாக நடைபெறுவதால், புறநகர் ரெயில்கள் 5 மற்றும் 6-வது நடைமேடைகளுக்கு மாற்றப்பட்டு புதிய தற்காலிக அட்டவணை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தால் ஆரம்ப நாட்களில் பயணிகள் சிரமத்தை சந்தித்தாலும், சேவையில் பெரும் குளறுபடிகள் எதுவும் இல்லை என தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 45 நாட்கள் காலத்திற்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த பணிகள் பாதுகாப்பு தரநிலைகள், வசதிகள் மற்றும் செயல்திறனை உயர்த்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் அதிக பயணிகளை சீரான முறையில் கையாளக்கூடிய, நவீன வசதிகள் கொண்ட பயணிகள் நட்பு நிலையமாக எழும்பூரை மாற்றுவதே இத்திட்டத்தின் முக்கிய இலக்காகும்.
அதுமட்டுமின்றி,தற்காலிக ரத்து மற்றும் மாற்று ஏற்பாடுகள் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டவை என்றும், பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு ரெயில் இயக்கம் கண்காணிக்கப்படுகிறது என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
மேலும், சமூக வலைதளங்களில் பரவும் சரிபார்க்கப்படாத தகவல்களை நம்பாமல், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறு பயணிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மேம்பாட்டு திட்டம் நிறைவு பெற்ற பின்னர், தினசரி லட்சக்கணக்கான பயணிகளுக்கு நீண்டகால நன்மைகள் கிடைக்கும் என ரெயில்வே நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
English Summary
Chennai Egmore Railway Station Development Works 45 days change schedule 40 suburban trains cancelled Passengers suffer