வாணியம்பாடியில் அதிர்ச்சி: தொழிலதிபர் மற்றும் மனைவியை கட்டிப்போட்டு கொள்ளை..! மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர்..!
Businessman and his wife tied up and robbed in Vaniyambadi
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நீலிக்கொல்லை புது தெருவை சேர்ந்தவர் இம்தியாஸ் அஹமது (66), தோல் தொழிற்சாலை உரிமையாளர். இவரது மனைவி சபிதாகுல்சும் (55). இவர்களது மகன், மகளுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.
வாணியம்பாடியை சேர்ந்த 37 வயதுடைய சக்திவேல் என்பவர் இவர்களது வீட்டில் வேலைக்காரராக உள்ளார். நேற்று முன்தினம் காலை, 04 பேர் கொண்ட கும்பல் இம்தியாஸ் அஹமது வீட்டில் புகுந்துள்ளனர்.
வீட்டில் இருந்த இம்தியாஸ் அஹமது, அவரது மனைவி, மற்றும் வேலைக்காரர் சக்திவேல் ஆகியோரின் கை, கால்களை கட்டி வாயை ‘டேப்’ பயன்படுத்தி ஒட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, சபீதாகுல்சும்மின் கால்கட்டை அவிழ்த்த கும்பல் அறைகளில் நகை, பணம் உள்ள பீரோக்களை திறக்கும்படி கூறியுள்ளனர்.

இந்த போது அவர்களிடம் இருந்து தப்பிய சபீதாகுல்சும் கதவை மூடிவிட்டு வெளியே ஓடிவந்து கூச்சலிட்டுள்ளார். இதன் பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கொள்ளை கும்பலை பிடிக்க முயன்றபோது கொள்ளைக்காரர்கள் பொதுமக்களை தள்ளிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இதுகுறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளத்தோடு, 02 தனிப்படைகள் அமைத்து கொள்ளை கும்பலை தேடி வந்தனர். பின்னர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவான உருவங்களை வைத்தும் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொள்ளை கும்பலுக்கும் இம்தியாஸ் அஹமது வீட்டு வேலைக்காரர் சக்திவேலுக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது அவரை தீவிரமாக விசாரித்ததில் அவரது நண்பர் இளவரசன் (49), திருப்பதியை சேர்ந்த சாந்தகுமாரி (34) ஆகிய 03 பேரும் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டதும் இளவரசனும், சாந்தகுமாரியும் திருப்பதியில் பதுங்கியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் நேற்று திருப்பதிக்கு சென்று அவர்களை பிடித்துள்ளனர். பின்னர் அவர்களை வாணியம்பாடிக்கு கொண்டு வந்து விசாரணை செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
வீட்டு வேலை பார்த்தது வந்த சக்திவேல் அடிக்கடி பெயிண்டர் வேலைக்கும் சென்று வந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் அகரம் கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்த இளவரசனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இளவரசன் மற்றும் சக்திவேல் இருவரும் தொழிலதிபரின் வீட்டில் கொள்ளையடித்தால் வசதியாக வாழலாம் என முடிவு செய்து, இளவரசன் தனக்கு பழக்கமான ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த சாந்தகுமாரியுடன் சேர்ந்து தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் போட்டுள்ளார்.
குறித்த 03 பேரும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் அருண்குமார் உதவியை நாடி, அவர் கொடுத்த யோசனைப்படி 04 பேர் கொண்ட கொள்ளை கும்பலை ஏற்பாடு செய்து தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனிடையே மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் அருண்குமாரை திருமலை காவல்துறை உதவியுடன் கைது செய்து வாணியம்பாடிக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
English Summary
Businessman and his wife tied up and robbed in Vaniyambadi