பல்லடத்தில் பிரமாண்ட ஏற்பாடு - மோடியுடன் மேடையேற போகும் கூட்டணி தலைவர்கள் - எதிர்பார்ப்பில் அரசியல் கட்சிகள்.!
bjp conference in palladam
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே மாதப்பூரில், பாஜகவின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா மாநாடு இன்று மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.
இதற்காக மாதப்பூரில், மாநாடு நடைபெறும் மைதானத்தில் தாமரை வடிவில் மேடை அமைக்கப்பட்டு, ஐந்து லட்சம் அளவிலான பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில், இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மைதானம் முழுவதும் மத்திய சிறப்பு பாதுகாப்பு படை காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
மாநாட்டில் பார்வையாளர்களுக்கிடையில் பிரதமர் மோடி திறந்தவெளி வாகனத்தில் வருவதற்காக தார்த்தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், மைதானம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் கொண்டு மைதானம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 6000 த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பல்லடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் மேடை ஏறப்போகும் கூட்டணி கட்சித் தலைவர்கள் யார்?, யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதில், பாமகவும் பாஜக அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. மேலும், மீண்டும் மோடி தலைமையில் ஆட்சி அமைந்தால் ஒன்றிய அமைச்சர் பதவியை பாமக கேட்பதாக கூறப்படுகிறது. அத்துடன், இந்த மாநாட்டில் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி பல்லடம் மேடையில் இடம் பெறுவாரா? அல்லது அதிமுகவுடன் கூட்டு சேர்வாரா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.
English Summary
bjp conference in palladam