பவானி : செல்லாண்டி அம்மன் கோவில் மாசித்திருவிழா - பக்தர்கள் சேறு பூசி நேர்த்திக்கடன்.!
bavani sellandi amman kovil temple festival
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி நகர மக்களின் காவல் தெய்வமான செல்லாண்டி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மாசி திருவிழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு மாசி திருவிழா கடந்த 14-ந் தேதி முதல் தொடங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான பொங்கல் விழா இன்று காலை சக்தி அழைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதன் படி, செல்லாண்டி அம்மன் கோவிலில் இருந்து புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள எல்லையம்மன் கோவில் வரை அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர்.
அதன் பின்னர், சாமி எல்லையம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடம்பில் சேறு பூசி கொண்டும் பல்வேறு வகையான வேடங்கள் அணிந்து கொண்டும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதுமட்டுமல்லாமல், பக்தர்கள் உப்பு, மிளகு, வாழைப்பழம், தேங்காய், பிஸ்கட், புது துணி, பேனா, பென்சில் உள்ளிட்ட பல வகையான பொருட்களை சூறையிட்டு வழிபாடு மேற்கொண்டனர். இதை தொடர்ந்து, பக்தர்கள் இன்று காலை அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
இதைத் தொடர்ந்து நாளை காலை செல்லாண்டியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற உள்ளது. அத்துடன் நாளை இரவு கம்பம் எடுத்து காவிரி ஆற்றில் விடப்படுகிறது. மேலும், வருகிற மூன்றாம் தேதி பரிவேட்டையும், நான்காம் தேதி தெப்ப உற்சவம், ஐந்தாம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது.
English Summary
bavani sellandi amman kovil temple festival