திருநெல்வேலி: தடுப்பு சுவரில் ஆட்டோ மோதி விபத்து.! குழந்தை, சிறுமி உயிரிழப்பு.!
Auto accident in Tirunelveli
திருநெல்வேலி மாவட்டத்தில் தடுப்பு சுவரில் ஆட்டோ மோதிய விபத்தில் குழந்தை, சிறுமி உயிரிழந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் ராஜதுரை(52). இவருக்கு முருகன் என்ற மகனும், அனுசியா(15) என்ற மகளும் உள்ளனர்.
முருகனுக்கு பிரீத்தி என்ற பெண்ணோடு திருமணம் நடந்து, பிரதீஷா என்ற ஒன்றை வயது குழந்தை உள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை ராஜதுரை தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அனுசியா, முருகனின் மனைவி பிரீத்தி, மகள் ப்ரீத்திஷா ஆகியோருடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது பழவூர் நான்கு வழிச்சாலையில், ஆட்டோ திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.
இதில் படுகாயமடைந்த நான்கு பேரையும் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பிரதீஷா மற்றும் சிறுமி அனுசியா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்து பழவுர் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Auto accident in Tirunelveli