காங்கிரஸில் மொத்தமாக ஓரம்கட்டப்படும் செல்வபெருந்தகை? ஒழுங்கு நடவடிக்கை புகார்? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Is Selvaperunthagai being completely sidelined within the Congress A complaint regarding disciplinary action A stir in political circles
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சியின் மாணவர் அமைப்பான தேசிய மாணவர் சங்கம் (NSUI) சார்பில் காங்கிரஸ் மேலிடத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட செல்வப்பெருந்தகை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், புதிய மாநிலத் தலைவராக விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையில், காங்கிரஸ் தற்போது தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று, அதன் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவையிலும் உள்ளனர்.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை விமர்சித்து பேசியதற்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, அந்த கருத்தை "அநாகரிகமானது" என்றும் "சட்டப்பேரவையின் மாண்புக்கு ஏற்றதல்ல" என்றும் விமர்சித்திருந்தார்.
அவரது இந்தக் கருத்து கூட்டணியின் நிலைப்பாட்டுக்கு முரணானது என்றும், கட்சியின் ஒழுங்கு மற்றும் அரசியல் நிலைப்பாட்டை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறி, NSUI சார்பில் காங்கிரஸ் மேலிடத்திற்கு புகார் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த புகாரில், செல்வப்பெருந்தகையின் சமீபத்திய கருத்துகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் கட்சித் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவரது செயல்பாடுகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தி, தேவையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கூட்டணிக் கட்சிகள் குறித்த அவரது கருத்துகள் காங்கிரஸின் அரசியல் அடையாளத்தை பாதிப்பதாகவும், பொதுவெளியில் தெரிவிக்கப்படும் கருத்துகள் கட்சியின் நம்பகத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்த புகார் குறித்து காங்கிரஸ் மேலிடம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. அதேபோல், செல்வப்பெருந்தகையும் இந்த விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இதனால், செல்வப்பெருந்தகை மீது உண்மையிலேயே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது இது கட்சிக்குள் நடைபெறும் கருத்து வேறுபாடாக மட்டுமே முடிவடையுமா என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
English Summary
Is Selvaperunthagai being completely sidelined within the Congress A complaint regarding disciplinary action A stir in political circles