மக்கள் பிரச்சினை பற்றி பேச இரண்டு நாட்கள் போதுமா!
Assembly meeting held only until the day after tomorrow
மறுநாள் வரை மட்டுமே நடைபெறும் சட்டப்பேரவை கூட்டம்!
தமிழக சட்டப்பேரவை இன்று துவங்கியது. முதல் நாளான இன்று மறைந்த முன்னாள் சபாநாயகர் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் 10 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் முலாயம் சிங் யாதவ், கொடியேறி பாலகிருஷ்ணன், மலேசியா டத்தோசாமி ஆகியோரின் மறைவிற்கும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. மேலும் மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவிற்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாளை காலை 10 மணி வரை தமிழக சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து சட்டப்பேரவை அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்களுக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தொடரில் இந்தி திணிப்பிற்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். மேலும் கூடுதல் செலவு திட்டத்திற்கு மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பு நடைபெறும் என தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை நடைபெறும் இரண்டு நாட்களிலும் கேள்வி நேரம் ஒதுக்கப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு என பல்வேறு பிரச்சனைகள் தமிழகத்தில் நிலவி வரும் நிலையில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இரண்டு நாட்களுக்கு மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் பிரச்சினையை பற்றி கேள்வி எழுப்ப வேண்டிய பிரதான கட்சியான அதிமுகவில் உட்கட்சி பூசலின் காரணமாக இன்று நான்கு எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கு பெற்றனர். மேலும் நடைபெற உள்ள இரண்டு நாள் சட்டப்பேரவை கூட்டத் தொடரை பெரும்பான்மை அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
English Summary
Assembly meeting held only until the day after tomorrow