உருவாகிறதா புதிய மாவட்டமாக ஆரணி?.!
Arani is Emerging as a New District
புதிய மாவட்டமாக ஆரணி உருவாகிறதா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
1989 இல் வடாற்காடு நிர்வாக வசதிக்காக, வேலூர், திருவண்ணாமலை என இரண்டு தனித்தனி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. தற்போது வரை ஆரணி திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து வருகிறது.
ஆரணி மிகவும் பழமைவாய்ந்த நகரமாகவும் விளங்கிவருகிறது. சம்புவராய அரசர்கள், விஜயநகர அரசர்கள் காலத்தில கோட்டைகள், அரண்மனைகள் மற்றும் ஆங்கிலேயர் காலத்தில் கட்ட்டப்பட்ட நினைவுத்தூண்கள், கட்டடங்கள் யாவும் தற்போதும் உள்ளன. மேற்கு ஆரணியில் உள்ள பூசிமலைக்குப்பம் கண்ணாடி மாளிகை ஜாகிர்களின் சிறந்த கட்டமாக விளங்குகிறது. தேவிகாபுரம் கோயில், படைவீட்டம்மன் கோயில், செண்பகத்தோப்பு அணை போன்றவையும் ஆரணிக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது.

அத்துடன் களம்பூர் அரிசி மற்றும் ஆரணி பட்டு உலகப் புகழ்பெற்று விளங்குகிறது. இத்தகைய பல்வேறு சிறப்புகள் கொண்ட நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை.
நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைப்போம் எனவும் வாக்குறுதி அளித்தனர்.

கடந்த இருதினங்களுக்கு முன் தனது தாயின் நினைவுநாளை முன்னிட்டு ஆரணியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஏசி சண்முகம் அவர்களும் ஆரணியை தனி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை வைத்துள்ளார். இன்னொரு பக்கம் செய்யாறு நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு தனிமாவட்டம் அமைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது எல்லாம் ஒருபுறம் இருக்க ஆரணி பகுதியைச் சார்ந்த நெட்டீசன்கள் சமூக வலைதளங்களில் ஆரணியின் பழம்பெருமைகளை எல்லாம் பதிவிட்டு ‘வேண்டும் ஆரணி தனி மாவட்டம்’ என்றும் ‘ஆகலாம் ஆரணி தனிமாவட்டம்’ எனவும் பதிவிட்டு வருகின்றனர்.
English Summary
Arani is Emerging as a New District