திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷே தேதி அறிவிப்பு!
Announcement of the Kumbhabhishekam date for the Tirupparangunram temple
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற ஜூலை மாதம் 14-ந்தேதி அதிகாலை 5.25 மணி முதல் 6.10 மணிக்குள் ராஜ கோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.2.44 கோடியில் 20 திருப்பணிகள் செய்வது என்று முடிவு செய்யப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் 10-ந்தேதி அன்று ராஜகோபுரம் மற்றும் உப கோவில்களுக்கு பாலாலயம் நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து பிப்ரவரி 24-ந்தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு கோவிலின் 7 நிலை ராஜகோபுரத்தில் பழமை மாறாமல் பஞ்சவர்ணம் பூசும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.இதே போல கோவிலின் பிரதானமான கருவறையில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி பாலாலயம் நடத்தப்பட்டு திருப்பணிகள் நடக்கிறது.
இதற்கிடையே கோவில் அறங்காவலர் குழு தலைவர் ப.சத்யபிரியா பாலாஜி தலைமையில் தேங்காய் தொடும் முகூர்த்தம் நிகழ்ச்சி நேற்று கோவில் அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னதாக கோவிலில் இருந்து கோவில் அலுவலகம் வரை மேளதாளங்கள் முழங்க தேங்காய் பழங்களுடன் கோவில் சிவாச்சாரியார்கள் வந்தனர்.
பின்னர் சிவாச்சாரியார்கள் தயார்படுத்திய கும்பாபிஷேகம் நேரம், யாகசாலை பூஜையின் விவரம் மற்றும் கும்பாபிஷேக அழைப்பிதழ் குறித்து வாசித்தனர் . அதில் வருகிற 23-ந்தேதி காலை 8 மணி முதல் 9 மணியளவில் முகூர்த்தக்கால் நடப்படுகிறது. இதனை தொடர்ந்து வருகிற ஜூலை மாதம் 14-ந்தேதி அதிகாலை 5.25 மணி முதல் 6.10 மணிக்குள் ராஜ கோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதற்காக ஜூலை 10-ந்தேதி யாகசாலை பூஜை தொடங்குகிறது. தொடர்ந்து 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் இரு வேளையிலும் யாகசாலை பூஜை நடக்கிறது என தெரிவிக்கப்பட்டது.
English Summary
Announcement of the Kumbhabhishekam date for the Tirupparangunram temple