விசிகவினரை தாக்கிய வழக்கு: ஏர்போர்ட் மூர்த்தியை செப்டம்பர் 22 வரை சிறையிலடைக்க உத்தரவு..!
Airport Murthy ordered to be remanded in custody until September 22 in the case of attacking VCK members
ஏர்போர்ட் மூர்த்தியை வரும் செப்டம்பர் 02 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. டிஜிபி அலுவலக வளாகம் முன்பு விசிகவினருடன் ஏற்பட்ட மோதலில், விசிகவினரை தாக்கியமை தொடர்பாக விசிக நிர்வாகி அளித்த புகாரின் பேரில் மெரினா போலீசார் ஏர்போர்ட் மூர்த்தியை நேற்றிரவு கைது செய்தனர்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி வந்தார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சிலர் தங்கள் தலைவரை சமூக வலைதளங்களில் தவறாக பேசுவதாக கூறி ஏர்போர்ட் மூர்த்தியை ஓட ஓட தாக்கி, செருப்பால் அடித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு தரப்பினரும் சாலையிலேயே ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டதால் பேராபத்து நிலவியது.

அப்போது பதிலுக்கு ஏர்போர்ட் மூர்த்தி தான் வைத்திருந்த பாக்கெட் கத்தியால் விசிக நிர்வாகி திலீபன் என்பவரது கையில் கிழித்ததாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவருக்கு 16 தையல்கள் போடப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் புரட்சித் தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மெரினா காவல் நிலையத்தில் தன்னை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.
அத்துடன், விசிக மாநில துணைப் பொது செயலாளர் ரஜினிகாந்த், விசிகவினரை கத்தியால் தாக்கியதாக ஏர்போர்ட் மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் ஆணையர்அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விசிக நிர்வாகி திலீபன் மெரினா காவல் நிலையத்தில் ஏர்போர்ட் மூர்த்தி மீது புகார் அளித்தார். இரு தரப்பு புகார்கள் தொடர்பாக, மெரினா போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது இரு தரப்பு மீதும் தவறுகள் உள்ளது என, மெரினா போலீசார் புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி அளித்த புகாரின் பேரில் அவரை தாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் 05 பேர் மீது 02 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திலீபன் அளித்த புகாரின் படி, புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது 03 பிரிவுகளின் கீழ் மெரினா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா காவல்துறையினர் நேற்று இரவு அதிரடியாக கைது செய்தனர். இதனையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம்நீதிபதி ஏர்போர்ட் மூர்த்தியை வரும் செப்டம்பர் 22 வரை சிறையிலடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
English Summary
Airport Murthy ordered to be remanded in custody until September 22 in the case of attacking VCK members