அதிரடி சோதனை.. தூத்துக்குடியில் 1500 லிட்டர் கலப்பட பால் பறிமுதல்..!!
1500 liters of adulterated milk seized in Tuticorin
தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் பால் விற்பனையாளர்கள் அவர்கள் விற்பனை செய்யப்படக்கூடிய பாலில் தண்ணீர் மற்றும் ரசாயனம் கலந்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் தூத்துக்குடி_பாளையங்கோட்டை சாலையில் அமைந்திருந்த உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நிலையங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் பொழுது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் உடன் இருந்தார். அப்பொழுது பால் தரத்தினை சோதனைக் கருவிகளைக் கொண்டு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது சில பால் கேன்களில் பாலுடன் தண்ணீர் கலந்து இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து தண்ணீர் கலக்கப்பட்ட பால் கேன்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பால் மாதிரிகளை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இந்தஸ சோதனையின் பொழுது சுமார் 1500 லிட்டர் பால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பால்களில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய பால்களின் மாதிரியை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். இந்த சோதனையானது அடுத்த இரண்டு மாதங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெறும் என்று தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் முதற்கட்ட சோதனை இன்று நடைபெற்றுள்ளதாகவும் பால் உற்பத்தி செய்யப்படும் பண்ணைகள் மற்றும் பால் பாக்கெட் தயாரிக்கும் இடங்களில் சோதனையானது தொடர்ந்து நடைபெறும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் தனியாருக்கு பால் வழங்குவதால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் அரசு அதிகாரிகள் செயல்படுவதாக தனியார் பால் விற்பனையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
English Summary
1500 liters of adulterated milk seized in Tuticorin