கிருஷ்ணகிரியில் சோகம்: நுங்கு வெட்ட பனை மரத்தில் ஏறிய 10-ஆம் வகுப்பு மாணவன் தவறி விழுந்து பலி!
10th Standard Student Falls to Death from Palmyra Tree in Krishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பள்ளி விடுமுறை நாளில் நிகழ்ந்த ஒரு துயரச் சம்பவம் ஒட்டுமொத்த கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் அருகேயுள்ள பாப்பாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கௌவரன்.
இவரது மகன் நந்தகுமார் (15), அரசம்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வந்தார். பள்ளி விடுமுறை என்பதால், நேற்று மாலை 6:30 மணியளவில் தனது தந்தையின் நிலத்திற்கு அருகிலுள்ள அப்பாஸ் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் இருந்த பனை மரத்தில் நுங்கு வெட்டுவதற்காக நந்தகுமார் ஏறியுள்ளார்.
மரத்தின் உச்சாணிக் கிளையில் நுங்கு வெட்டிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகப் பிடி நழுவி நந்தகுமார் கீழே விழுந்தார். இதில் அவருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டன. கண்ணெதிரே தனது மகன் விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த கௌவரன் மற்றும் கல்லூரியில் பயிலும் நந்தகுமாரின் சகோதரிகள் ஹரிணி, கோமதி ஆகியோர் உடனடியாக அவரை மீட்டு தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
எனினும், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாகப் பாரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
10th Standard Student Falls to Death from Palmyra Tree in Krishnagiri