சில ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி! மிக்க மகிழ்ச்சி!இந்தியாவை வீழ்த்த இதான் காரணம்.. ஆட்டநாயகன் மிட்சேல் பேட்டி
Victory after a few years Very happy This is the reason for defeating India Interview with Man of the Match Mitchell
இந்தியாவுக்கு எதிராக ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1–1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நியூசிலாந்து, இந்த வெற்றியின் மூலம் வலுவான பதிலடியை கொடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 285 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணிக்காக அதிகபட்சமாக கே.எல். ராகுல் சதம் விளாசி 112 ரன்கள் (ஆட்டமிழக்காமல்) எடுத்தார். கேப்டன் ஷுப்மன் கில் 56 ரன்கள் சேர்த்தார். இவர்களைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறியதால், இந்தியாவின் ஸ்கோர் எதிர்பார்த்த அளவிற்கு உயரவில்லை.
அதனைத் தொடர்ந்து 286 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 47.3 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. டேரில் மிட்சேல் அசாதாரண ஆட்டத்தை வெளிப்படுத்தி 131 ரன்கள் (ஆட்டமிழக்காமல்) குவித்தார். அவருக்கு துணையாக வில் யங் 87 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 32 ரன்களும் (ஆட்டமிழக்காமல்) எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம், 2017க்கு பிறகு இந்தியாவை அதன் சொந்த மண்ணில் ஒருநாள் போட்டியில் தோற்கடித்த பெருமையையும் நியூசிலாந்து பெற்றுள்ளது.
அற்புதமான சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த டேரில் மிட்சேல் ஆட்டநாயகன் விருதை வென்றார். போட்டிக்குப் பிறகு பேசிய அவர், “சில ஆண்டுகளாக இந்தியாவில் வெற்றி பெற முடியாமல் இருந்தோம். அதனால் இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உலகின் சிறந்த அணிகளில் ஒன்றான இந்தியாவுக்கு எதிராக எங்களுடைய இளம் அணி சிறப்பாக போராடியது பெருமையாக இருக்கிறது,” என்று கூறினார்.
மேலும், இந்தியாவின் பந்துவீச்சு குறித்து கருத்து தெரிவித்த மிட்சேல், “குல்தீப் யாதவ் உலகிலேயே சிறந்த ஸ்பின்னர்களில் ஒருவர். பந்தை இருபுறமும் சுழற்றக்கூடிய திறமை அவருக்கு உள்ளது. அவரை எதிர்கொள்ளும்போது சூழ்நிலையை நன்கு புரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல் விளையாடுவது முக்கியமாக இருந்தது. அவர்மீது அழுத்தம் கொடுத்து விளையாடியதே எங்களுக்கு வெற்றியை பெற்றுத் தந்தது,” என பாராட்டினார்.
இந்த வெற்றியால் ஒருநாள் தொடர் தற்போது சமநிலையில் இருப்பதால், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி தொடரை வெல்லும் போட்டியாக மாறியுள்ளது. இரு அணிகளும் தொடரை கைப்பற்ற கடும் போட்டியை வழங்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
English Summary
Victory after a few years Very happy This is the reason for defeating India Interview with Man of the Match Mitchell