டி20 உலக கோப்பை: வங்கதேசத்தின் கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி...!
T20 World Cup ICC rejected Bangladesh request
வங்கதேசத்தில் நடைபெற்ற இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள், தற்போது கிரிக்கெட் மைதானத்திலும் அரசியல்–விளையாட்டு மோதலாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இந்த விவகாரம் ஐ.பி.எல். தொடர் முதல் டி20 உலகக் கோப்பை வரை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.பி.எல். தொடரில் விளையாட இருந்த வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்டாபிசுர் ரகுமானுக்கு, பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தன. இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு மற்றும் சூழ்நிலை காரணங்களை முன்வைத்து, கிரிக்கெட் வாரியத்தின் அறிவுறுத்தலின் பேரில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி முஸ்டாபிசுர் ரகுமானை அணியிலிருந்து நீக்கியது.
இந்த நடவடிக்கைக்கு பதிலடி அளிக்கும் வகையில், இந்தியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க வங்கதேசம் தயக்கம் காட்டியுள்ளது. பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து, தங்கள் அணி மோதும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இந்த கோரிக்கையை ஐ.சி.சி. நிராகரித்ததாகவும், இந்தியாவில் விளையாட மறுத்தால் போட்டிப் புள்ளிகளை இழக்கும் அபாயம் ஏற்படும் என்று வங்கதேசத்திற்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் காணொலி அழைப்பு மூலம் தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதே நேரத்தில், ஐ.சி.சி.யிடமிருந்து தங்களுக்கு எந்த இறுதி எச்சரிக்கையும் வரவில்லை என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால், உலகக் கோப்பை போட்டிகளைச் சுற்றி குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது.
வரவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் வங்கதேசம் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அந்த அணி பிப்ரவரி 7-ம் தேதி வெஸ்ட் இண்டீஸ், பிப்ரவரி 9-ம் தேதி இத்தாலி, பிப்ரவரி 14-ம் தேதி இங்கிலாந்து, பிப்ரவரி 17-ம் தேதி நேபாளம் ஆகிய அணிகளுடன் மோதுகிறது. இந்த முக்கிய போட்டிகள் கொல்கத்தா மற்றும் மும்பை நகரங்களில் நடைபெற உள்ளன.
English Summary
T20 World Cup ICC rejected Bangladesh request