எதிர்பார்த்த அந்த நாள் வந்தாச்சு! மும்பைக்கு எதிராக இன்று களமிறங்குகிறாரா 'தல' தோனி...? - ரசிகர்கள் ஆவலோடு காத்திருப்பு
long awaited day arrived Will Thala Dhoni playing against Mumbai today Fans eagerly waiting
10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா, இந்தியாவின் பல நகரங்களில் ரசிகர்களின் உற்சாகக் குரல்களுடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில், ஐந்து முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.

இந்த சீசனின் தொடக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்பாராத சறுக்கலை சந்தித்தது. முதல் மூன்று போட்டிகளில் ராஜஸ்தான், பஞ்சாப், பெங்களூரு அணிகளிடம் தோல்வியை சந்தித்த அந்த அணி, பின்னர் டெல்லி மற்றும் கொல்கத்தாவுக்கு எதிராக வெற்றி பெற்று மீண்டும் தன்னம்பிக்கையை கட்டியெழுப்பியது.
எனினும், கடந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில், அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இதுவரை ஒரு போட்டியிலும் களமிறங்காதது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
நடப்பு சீசனுக்கு முன் நடைபெற்ற பயிற்சியின்போது ஏற்பட்ட கால்தசை பிடிப்பால் அவர் சற்று பாதிக்கப்பட்டிருந்தாலும், தற்போது சிகிச்சைக்கு பின் மீண்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என தெரிவிக்கப்படுகின்றது.
மும்பை அணியை எதிர்கொள்ளும் இன்றைய முக்கிய ஆட்டத்தில் தோனி களமிறங்குவாரா என்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. அவர் முழுமையான உடல் நிலையை அடைந்திருந்தால், அவரும் மருத்துவ குழுவும் இணைந்து இறுதி முடிவை எடுப்பார்கள் என சென்னை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் எரிக் சிமோன்ஸ் முன்பே தெரிவித்துள்ளார்.
ஆனால், சமீபத்திய தகவல்களின் படி, இன்றைய ஆட்டத்தில் தோனி விளையாட வாய்ப்பு குறைவு என தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தாலும், போட்டி நிலைக்கு முழுமையாக திரும்ப அவர் இன்னும் தயாராகவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும், களமிறங்குவது குறித்து இறுதி தீர்மானத்தை தோனியே எடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
long awaited day arrived Will Thala Dhoni playing against Mumbai today Fans eagerly waiting