“2011 உலககோப்பை தொடரில் ரோகித்தை தேர்வு செய்யாதது வருத்தம் தான்” – 2011 உலகக்கோப்பை குறித்து ஸ்ரீகாந்த் விளக்கம்
It is a pity that Rohit was not selected for the 2011 World Cup Srikanth explains about the 2011 World Cup
2011ஆம் ஆண்டு இந்தியா கைப்பற்றிய ஒருநாள் உலகக்கோப்பை வெற்றி இன்னும் ரசிகர்களின் நினைவில் உற்சாகமாக உள்ளது. எம்.எஸ். தோனி தலைமையில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் விராட் கோலி இடம்பெற்றிருந்தாலும், அதற்கு முன்பே சர்வதேச அரங்கில் அறிமுகமான ரோகித் சர்மா இடம்பெறாதது அப்போது பெரிய விவாதமாக இருந்தது.
இந்த விவகாரம் குறித்து தற்போது முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விளக்கம் அளித்துள்ளார். “ரோகித் சர்மாவை அந்த அணியில் சேர்க்காதது குறித்து இன்று வரை எனக்கு வருத்தம் உள்ளது. அவரிடம் நேரில் மன்னிப்பும் கேட்டுள்ளேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ரோகித் தேர்வு செய்யப்படாததற்கான காரணத்தையும் அவர் தெளிவுபடுத்தினார். “1983 உலகக்கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றபோது அணியில் பல ஆல்ரவுண்டர்கள் இருந்தனர். அதே மாதிரி ஒரு சமநிலையான அணியை உருவாக்கவே 2011 உலகக்கோப்பைக்கும் நாங்கள் திட்டமிட்டோம். அதனால் அதிக அளவில் ஆல்ரவுண்டர்களை சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. முழுநேர பேட்ஸ்மேனாக இருந்த ரோகித்தை அந்த சமயத்தில் தேர்வு செய்ய முடியவில்லை,” என்றார்.
மேலும், “அந்தத் தொடரில் யுவராஜ் சிங் ஆல்-ரௌண்டராக அசத்தி ‘மேன் ஆஃப் தி டோர்னமென்ட்’ விருதை வென்றார். சேவாக், சச்சின், ரெய்னா, யூசுப் பதான் போன்றவர்களும் தேவையான போது பந்துவீச்சில் பங்களித்தனர். இந்த சமநிலையே அணிக்கு கோப்பையை வெல்ல உதவியது,” என்றும் ஸ்ரீகாந்த் கூறினார்.
ரோகித் சர்மா தற்போது பல ஐசிசி தொடர்களை வென்றிருந்தாலும், ஒருநாள் உலகக்கோப்பையை கைப்பற்ற முடியாத ஏக்கம் இன்னும் நீங்கவில்லை. 2027 உலகக்கோப்பை வரை விளையாடும் எண்ணம் இருப்பதாக அவர் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
It is a pity that Rohit was not selected for the 2011 World Cup Srikanth explains about the 2011 World Cup