மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹார்டிக் பாண்டியா வேண்டாம்..அந்த வீரரை கேப்டனாக மாத்துங்க – ஸ்ரீகாந்த் கருத்து
Hardik Pandya should not be the captain of Mumbai Indians make that player the captain Srikkanth opinion
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்ற அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸுடன் இணைந்து முதலிடத்தில் இருக்கும் அணி மும்பை இந்தியன்ஸ். இந்த அணி இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றாததால், 2026 ஐபிஎல் தொடரில் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் நோக்கில் தீவிரமாக தயாராகி வருகிறது.
கடந்த 2013 முதல் 2020 வரை ரோகித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதன் பின்னர் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, ஹார்திக் பாண்டியா மும்பை அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் அணி பலமானதாக இருந்தாலும், இதுவரை கோப்பையை வெல்ல முடியாததால் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையில், மும்பை அணியில் உள்ள மற்ற திறமையான வீரர்களுக்கும் கேப்டன் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற கருத்தும் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஒரு முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார். அதன்படி, சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ஸ்ரீகாந்த்,“மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங், பவுலிங், ஆல்ரவுண்டர் என அனைத்திலும் வலுவாக இருக்கிறது. ஆனாலும் இத்தனை நட்சத்திர வீரர்கள் இருந்தும் கோப்பையை வெல்ல முடியாமல் இருப்பது ஏமாற்றம்தான். என்னை பொறுத்தவரை டி20 உலகக்கோப்பையை வென்ற சூர்யகுமார் யாதவ் மும்பை அணியின் கேப்டனாக இருந்தால் நல்லது. அவருக்கு சுமார் 90% வெற்றி சராசரி உள்ளது. அதனால் அவர் கேப்டனாக வந்தால் அணி சிறப்பாக செயல்படும்” என்று கூறினார்.
மேலும் அவர்,“ஹார்திக் பாண்டியா தானாகவே முன்வந்து, ‘சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருக்கட்டும், நான் சாதாரண வீரராக விளையாடுகிறேன்’ என்று கூறினால் மட்டுமே இந்த மாற்றம் சாத்தியம்” என்றும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீகாந்தின் இந்த கருத்து தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் குறித்து என்ன முடிவு எடுக்கப்படும் என்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
English Summary
Hardik Pandya should not be the captain of Mumbai Indians make that player the captain Srikkanth opinion