“டைவ் அடிக்காதே… உன் 4 ஓவர்கள்தான் முக்கியம்” – தோனி சொன்ன அறிவுரை!நினைவுகளை பகிர்ந்த பிராவோ!
Donot dive your 4 overs are the only thing that matters Dhoni advice Bravo shares his memories
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக ஒரு தசாப்தம் நட்சத்திர வீரராக விளங்கியவர். ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் வரை சிஎஸ்கே அணியின் வெற்றிப் பயணத்தில் அவரது பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. சிஎஸ்கே பல முறை சாம்பியன் பட்டம் வென்ற காலகட்டங்களில், பிராவோ அணியின் முக்கிய தூண்களில் ஒருவராக திகழ்ந்தார்.
சிஎஸ்கே அணிக்காக 10 சீசன்களில் விளையாடிய பிராவோ, 154 விக்கெட்டுகள் வீழ்த்தி, அந்த அணிக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளராக இன்றளவும் சாதனைப் பட்டியலில் உள்ளார். மேலும், இரண்டு முறை ஊதா தொப்பி வென்ற பெருமையும் அவருக்கு உண்டு. பிராவோ – சிஎஸ்கே அணிக்கிடையேயான பந்தமும், குறிப்பாக எம்.எஸ். தோனியுடன் அவருக்கு இருந்த நெருக்கமும் கிரிக்கெட் ரசிகர்களிடையே பரவலாக அறியப்பட்ட ஒன்று.
இந்த நிலையில், 2018 ஐபிஎல் சீசன் குறித்து ஒரு சுவாரசியமான சம்பவத்தை பிராவோ தற்போது நினைவுகூர்ந்துள்ளார். இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட பிறகு சிஎஸ்கே மீண்டும் ஐபிஎல் களத்திற்கு திரும்பிய அந்த சீசனில், ஒரு போட்டியின் போது பவுண்டரி லைனில் பந்தை தடுக்க பிராவோ டைவ் அடித்ததாக அவர் கூறினார்.
அந்த தருணத்தில், கேப்டன் எம்.எஸ். தோனி அவரை அழைத்து, அவரது உடல்நலனை கருத்தில் கொண்டு முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கியதாக பிராவோ தெரிவித்தார்.
“நீ இனிமேல் மைதானத்தில் டைவ் அடிக்கக்கூடாது. உன் உடற்தகுதி அணிக்கு மிகவும் முக்கியம். பவுண்டரியில் டைவ் அடித்து நான்கு ரன்களைத் தடுப்பதை விட, நீ வீசப்போகும் நான்கு ஓவர்கள் அணிக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை” என்று தோனி கூறியதாக பிராவோ நினைவுகூர்ந்தார்.
இதன் பிறகு, தானே உள்வட்டப் பகுதியில் பீல்டிங் செய்யத் தொடங்கியதாகவும், அந்த நேரத்தில் தனக்கு சுமார் 34 வயது இருந்ததாகவும் பிராவோ கூறினார்.தோனியின் அணுகுமுறையும், வீரர்களின் உடல்நலத்தை முதன்மையாகக் கருதும் தலைமைத்துவமும் இந்த சம்பவத்தின் மூலம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது.
English Summary
Donot dive your 4 overs are the only thing that matters Dhoni advice Bravo shares his memories