அபய, வரத ஹஸ்தம்.. தும்பிக்கையாழ்வார்.. அருள்மிகு கிருஷ்ணர் திருக்கோயில்.!
Today special Coimbatore krishnar temple
இந்த கோயில் எங்கு உள்ளது?
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நீலிக்கோணம்பாளையம் என்னும் ஊரில் அருள்மிகு கிருஷ்ணர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
கோயம்புத்தூரில் இருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் நீலிக்கோணம்பாளையம் அமைந்துள்ளது. நீலிக்கோணம்பாளையத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
கருவறையில் கிருஷ்ண பகவான் நின்ற கோலத்தில் அபய, வரத ஹஸ்தம் காட்டி புன்னகை ததும்பும் முகத்துடன் எழுந்தருளியுள்ளார்.
கிருஷ்ண பகவானின் வலது பக்கத்தில் உள்ள ருக்மணி தாயார் இடது கரத்தில் மணியை ஏந்தியும், இடது பக்கத்தில் உள்ள சத்யபாமா தாயார் வலது கரத்தில் விரிந்தும் விரியாமலும் உள்ள தாமரை மலரை ஏந்தியும் நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றனர்.
அர்த்த மண்டபத்தில் உற்சவர் மற்றும் ஆலிலை கிருஷ்ணனின் விக்கிரகங்கள் அமைந்துள்ளன.
கிருஷ்ணனின் கருவறை மேலுள்ளது ஏக விமானமாகும். இதில் தசாவதாரத்தை குறிக்கும் வகையில் சுதை சிற்பங்கள் அமைந்துள்ளன.
கோஷ்டத்தில் மகாவிஷ்ணு, பூமராகவன், நரசிம்மர், ஸ்ரீநிவாசன் மற்றும் ஹயக்ரீவர் ஆகியோர் அருள்கின்றனர்.
மகா மண்டப சுவற்றின் மேல்புறம் கிழக்கு நோக்கிய வண்ணம் தும்பிக்கையாழ்வார் மற்றும் ருக்மணி, சத்யபாமா சமேத கிருஷ்ணன் ஆகியோரது சுதை சிற்பங்கள் அமைந்துள்ளன.

வேறென்ன சிறப்பு?
மகா மண்டபத்தின் கன்னி மூலையில் தும்பிக்கையாழ்வாருக்கு என விமானத்துடன் கூடிய தனிச்சன்னதி அமைந்துள்ளது.
கருவறையிலும் தும்பிக்கையாழ்வார் கம்பீரமாக எழுந்தருளியுள்ளார். மற்ற கோயில்களில் காணப்படும் சிலைகளிலிருந்து சற்றே மாறுபட்டுள்ளதை காணலாம். பின்னிரு கரங்களில் சங்கு சக்கரத்தையும், முன்னிரு கரங்களில் மோதகம் மற்றும் தந்தத்தையும் ஏந்தி அருள்பாலிக்கிறார்.
இச்சன்னதி எதிரே மூஷிக வாகனமும், பலிபீடமும் உள்ளன.
கோயிலில் தெற்கு நோக்கியபடி காளிங்க நர்த்தனர் பாம்பணையில் சயன கோலத்தில் மகாலட்சுமியுடன் சுதை சிற்பங்களாக அழகு சேர்க்கிறார்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
கோகுலாஷ்டமி இக்கோயிலில் மிக விமர்சையாக நடைபெறுகிறது. இங்கு நடைபெறும் கோலாட்ட நிகழ்ச்சியும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
ஏகாதசி, பௌர்ணமி, திருவோணம், சங்கடஹர சதுர்த்தி, அமாவாசை ஆகிய தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
குழந்தை பாக்கியம் வேண்டுவோர்கள், திருமண தடை உள்ளவர்கள் இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் கிருஷ்ணருக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
English Summary
Today special Coimbatore krishnar temple