தை இரண்டாம் நாள்... சாவித்ரி கௌரி விரதம்... செல்வ செழிப்பு உண்டாகும்.!
savitri gowri viratham
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அதே போல் தை மாதம் பிறந்ததும் நல்வழிகளை தரக்கூடிய விரத தினங்களும் ஆரம்பிக்கும். அவற்றில் ஒன்று சாவித்ரி கௌரி விரதம்.
இவ்விரதத்தால் நினைத்தது நிறைவேறும். நீண்ட ஆயுள், செல்வம், குழந்தை பாக்கியம் என அனைத்து வரங்களும் கிடைக்கும். இந்த விரதத்தை எவ்வாறு மேற்கொள்வது?... என்பதை பார்ப்போம்.
விரதமுறை :
தை மாதம் பிறந்த மறுநாள். அதாவது, தை இரண்டாம் நாள் செய்ய வேண்டிய அற்புதமான விரதம் இது.
விரததினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து நீராட வேண்டும். அதன்பின், குயவரின் வீட்டிற்கு சென்று அவரது சக்கரத்தில் இருந்து சிறிது மண்ணை எடுத்துக்கொண்டு வரவேண்டும். அந்த மண்ணால் சாவித்ரி தேவி வடிவம் செய்ய வேண்டும். (இயலாதபோது, சாவித்ரி தேவி திருவுருவப் படம் வைத்தும் பூஜை செய்யலாம்).
பிறகு, மௌன விரதம் மேற்கொண்டு முறைப்படி பூஜை செய்வதுடன், ஒன்பது முடிகள் போட்ட நோன்புக் கயிற்றைக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, தொடர்ந்து ஒன்பது நாட்கள் பூஜை செய்து, ஒன்பதாவது நாளன்று மாலையில் பூஜையை முடிக்க வேண்டும்.
இவ்வாறு ஒன்பது ஆண்டுகள் பூஜை செய்ய வேண்டும். ஒன்பதாம் ஆண்டு பூஜையை நிறைவு செய்யும்போது ஒன்பது ஜோடி முறங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றில் ஒவ்வொன்றிலும் ஒன்பது வெற்றிலை பாக்கு, ஒன்பது மஞ்சள் கிழங்குகள், ஒன்பது பழங்கள் என வைக்க வேண்டும்.
அதன் பிறகு சுமங்கலிகளை வரவழைத்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றைத் தந்து ஒருவருக்கு ஒரு ஜோடி முறம் தந்து அவர்களை வலம் வந்து வணங்கி, வழியனுப்ப வேண்டும். அதன் பிறகே உணவு உண்ண வேண்டும்.
விரத பலன்கள் :
இவ்விரதத்தை கடைபிடிப்பதால் நீண்ட ஆயுள், செல்வம், சந்தான பாக்கியம் ஆகிய அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.