சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் : ஆடி அமாவாசைத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மலையேற்றம் தொடங்கியது..!!
Devotees Trekking Started in Sathuragiri Sunthara Mahalingam Temple Aadi amaavasai Festival
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஆடி அமாவாசைத் திருவிழாவை முன்னிட்டு, இன்று (ஆகஸ்ட் 1) பக்தர்கள் மலையேற்றம் தொடங்கியுள்ளது.
மதுரை மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில், மேகமலை புலிகள் காப்பகத்தில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. சித்தர் மலை என போற்றப்படும் சதுரகிரி மலையில், சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி, ஆனந்தவல்லி அம்மன், பிலாவடி கருப்பசாமி, சட்டநாதமுனி குகை, மற்றும் 18 சித்தர்கள் சந்நிதி உள்ளது.
இந்த மலைக்கு பிரதி மாதம் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் என 8 நாட்களுக்கு மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப் படுகிறது. மேலும் ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மஹாளய அமாவாசை, தை அமாவாசை, மகா சிவராத்திரி மற்றும் நவராத்திரி விழாக்கள் கொண்டாடப் படுகின்றன.

இந்நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இந்த ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. அதில் இன்று ஆகஸ்ட் 1 பிரதோஷ வழிபாடும், நாளை சிவராத்திரி வழிபாடும், ஆகஸ்ட் 4ம் தேதி ஆடி அமாவாசை விசேஷ பூஜையும் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு பிரதோஷ தினமான இன்று காலை முதலே 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்து, இன்று காலை 6 மணி முதல் மலையேறி வருகின்றனர். இதுவரை 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறிச் சென்றுள்ள நிலையில் வரும் 4 நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சதுரகிரி வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
English Summary
Devotees Trekking Started in Sathuragiri Sunthara Mahalingam Temple Aadi amaavasai Festival