சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன உற்சவ திருவிழா தொடக்கம்.. ஜூலை 03 வரை திருவிழாக்கோலம்..!
Chidambaram Nataraja Temple Ani Thirumanjana Utsava festival begins
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. சிவ தளமான இந்த கோவில், பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குகிறது. இந்த கோயிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் 06 மகா அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் ஆனி மாதம் நடக்கும் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பு வாய்ந்தது. இந்த இரண்டு உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த ஸ்ரீ நடராஜமூர்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

சித்சபைக்கு எதிரே உள்ள கொடி மரத்தில் பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில், காலை 06.50 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் சிவகைலாஷ் தீட்சிதர் கொடியை ஏற்றி ஆனி திருமஞ்சன தரிசன விழாவை தொடங்கி வைத்தார். இதன் போது ஆயிரக்கணக்கானோர் ஓம் நமச்சிவாயா, ஓம் நமச்சிவாயா என கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தமை மெய் சிலிர்க்க வைத்தது.
எதிர்வரும் 24-ஆம் தேதி வெள்ளி சந்திரபிறை வாகன வீதி உலாவும், 25-ஆம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதி உலாவும், 26-ஆம் தேதி வெள்ளி பூதவாகன வீதி உலாவும், 27-ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதி உலாவும் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, 28-ஆம் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலா, 29-ஆம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலா, 03-ஆம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும் நடைபெறுகிறது.

அதனை தொடர்ந்து, ஜூலை 01-ஆம் தேதி தேர்த் திருவிழாவும், அன்று இரவு 08 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சார்ச்சனையும் நடைபெறவுள்ளது. ஜூலை 02-ஆம் தேதி அதி காலை சூரிய உதயத்துக்கு முன் காலை 04 மணி முதல் 06 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்திக்கு ராஜசபையில் மகாபிஷேகம் நடைபெறவுள்ளது.
அடுத்ததாக காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்ற பின்னர், பிற்பகல் 02 மணிக்கு மேல் ஆனி திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறவுள்ளன. தொடர்ந்து, 03-ஆம் தேதி பஞ்ச மூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதி உலா உற்சவமும், 04-ஆம் தேதி தெப்ப உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறவுள்ளது.
English Summary
Chidambaram Nataraja Temple Ani Thirumanjana Utsava festival begins