கரூர் வழக்கில் விஜய் திணறிட்டாராமே..? சரியான நேரத்தில் சீனுக்குள் வரும் அமித் ஷா! ரெடியான ரிப்போர்ட்!நடக்கப்போவது என்ன?
Will Vijay get stuck in the Karur case Amit Shah will come on the scene at the right time Ready report What will happen
கரூர் துயரம் தொடர்பான வழக்கில் சிபிஐ நடத்தி வரும் விசாரணை குறித்து, அதிகாரபூர்வமற்ற ஒரு விரிவான அறிக்கை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் சமர்ப்பிக்கப்படலாம் என டெல்லி வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தை அமித் ஷா தனிப்பட்ட முறையில் தீவிரமாக கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சிபிஐ என்பது நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்பு. குறிப்பாக டெல்லி போலீசின் கீழ் செயல்படும் சிபிஐ, மத்திய உள்துறை அமைச்சகத்தின் நிர்வாகத்திற்குள் வரும் அமைப்பாகும். அதனால், முக்கிய வழக்குகளில் நடைபெறும் விசாரணை நிலவரங்கள் உள்துறை அமைச்சருக்கு தெரியப்படுத்தப்படுவது இயல்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ மேற்கொண்ட விசாரணையின் முக்கிய அம்சங்கள், குறிப்பாக நடிகர் விஜயிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள் அடங்கிய ரிப்போர்ட் ஒன்று அமித் ஷாவிடம் செல்லும் என கூறப்படுகிறது.
டெல்லி தரப்பு வட்டாரங்களின் தகவலின்படி, சிபிஐ விசாரணையின் போது விஜய் அளித்த சில பதில்கள், விசாரணை அதிகாரிகளை திருப்திப்படுத்தவில்லை என்றும், அதனால் அவர் சாட்சியர் (Witness) என்ற நிலையிலிருந்து சந்தேகத்திற்கு உரிய நபர் (Suspect) என்ற நிலைக்கு மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் சாட்சியாக மட்டும் அழைக்கப்பட்ட விஜய், விசாரணையின் போது அளித்த விளக்கங்களே இந்த சந்தேகத்தை அதிகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணையின் முக்கிய அம்சமாக, திருச்சியிலிருந்து கரூர் வருவதில் விஜய் ஏன் தாமதமானார் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலாக, சாலை வளைவு, நெளிவு காரணமாக தாமதம் ஏற்பட்டதாக விஜய் விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அந்த பாதையில் தேசிய நெடுஞ்சாலை இருப்பதை சிபிஐ சுட்டிக்காட்டியதாகவும், விஜயின் வாகனம் சுமார் ஒரு மணி நேரம் நகராமல் நின்றிருந்ததை செல்போன் சிக்னல் மற்றும் சாட்டிலைட் தரவுகள் உறுதி செய்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அந்த ஒரு மணி நேரத்தில் வாகனம் ஏன் நிறுத்தப்பட்டது, விஜய் எங்கே இருந்தார், அந்த நேரத்தில் அவர் செல்போனில் பேசினாரா, யாருடன் பேசினார் என்பதற்கான பதிவுகள் சிபிஐயிடம் இருப்பதாகவும், இதன் அடிப்படையில் கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாகவே, சாட்சியாக இருந்த விஜய் மீது சந்தேகம் எழுந்ததாக கூறப்படுகிறது.
இன்றைய விசாரணையில், சம்பவ இடத்திற்கு தாமதமாக சென்றதற்கான காரணம், கீழே பிரச்சனை நடந்து கொண்டிருப்பது தெரியுமா, அபாயத்தை தடுக்க என்ன முயற்சி எடுத்தீர்கள், கூட்டம் அதிகமாக இருந்தபோது வாகனத்தை ஏன் அந்த இடத்திற்குள் கொண்டு சென்றீர்கள், நெரிசல் அபாயம் இருப்பதை எப்போது உணர்ந்தீர்கள், போலீஸ் வேண்டாம் என்று கூறியபோதும் உள்ளே ஏன் சென்றீர்கள் போன்ற பல அடுக்கடுக்கான கேள்விகளை சிபிஐ எழுப்பியதாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலாக, “போலீசார் கூறிய விதிமுறைகளின் படியே செயல்பட்டேன், எந்த விதிகளையும் மீறவில்லை” என்று விஜய் விளக்கம் அளித்ததாகவும், கூட்டத்தை சரியாக கட்டுப்படுத்தாததில் போலீசாரின் தவறும் இருக்கலாம் என்ற கோணத்தில் அவர் பதிலளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த விளக்கத்தை சிபிஐ முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, போலீசார் எப்போது செல்ல அனுமதி அளித்தார்கள், அவர்கள் சொன்னபடியே செயல்பட்டீர்களா, ஆம்புலன்ஸ் வர வேண்டிய சூழல் இருந்தபோது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள், ஆம்புலன்ஸ் வரும் நேரத்தில் பேச்சை ஏன் நிறுத்தவில்லை, உங்கள் விளக்கங்களுக்கு ஆதாரங்கள் உள்ளதா என்பதுபோன்ற கேள்விகளும் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விசாரணை அடிப்படையிலேயே, தற்போது FIR-ல் பெயர் இடம்பெறாத நிலையில் இருந்தாலும், கரூர் துயரம் தொடர்பான வழக்கின் குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிபிஐ விசாரணை எந்த திசையில் செல்லும், இந்த ரிப்போர்ட் அமித் ஷாவிடம் சென்ற பிறகு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதே அடுத்தகட்ட அரசியல் மற்றும் சட்ட விவாதங்களின் மையமாக மாறியுள்ளது.
English Summary
Will Vijay get stuck in the Karur case Amit Shah will come on the scene at the right time Ready report What will happen