திமுக வேட்பாளர் மாற்றம்... தேர்தலில் போட்டியிடவில்லை: தந்தைக்காக வழிவிடும் அமைச்சர் மகன்!
Vinod Gandhi Withdraws from TN Assembly Election Minister Gandhi to Contest from Ranipet Again
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், ராணிப்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடவிருந்த வினோத் காந்தி, தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழக அமைச்சரும், மூத்த திமுக தலைவருமான ஆர்.காந்தியின் மகனான வினோத் காந்திக்கு, இம்முறை ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடக் கட்சித் தலைமை வாய்ப்பு வழங்கியிருந்தது. இருப்பினும், தனது தந்தையின் விருப்பத்திற்கு மதிப்பளித்து இந்த வாய்ப்பை அவர் மீண்டும் தந்தையிடமே ஒப்படைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வினோத் காந்தி வெளியிட்டுள்ள உருக்கமான அறிக்கையில், "எனக்கு இத்தகைய அரிய வாய்ப்பை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். எனது தந்தை மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற உறுதியான விருப்பத்தைக் கொண்டுள்ளார். ஒரு மகனாக அவரது விருப்பத்திற்கு மதிப்பளிப்பதும், அவரது அரசியல் அனுபவத்திற்கு வழிவிடுவதும் எனது கடமை என நான் கருதுகிறேன். எனவே, எனக்கு ஒதுக்கப்பட்ட இந்த வாய்ப்பை நான் மீண்டும் என் தந்தையிடமே மனமுவந்து ஒப்படைக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனக்கு ஆதரவு தெரிவித்த கட்சித் தொண்டர்கள் மற்றும் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், மக்கள் சேவையில் ஈடுபடத் தனக்கு இன்னும் நீண்ட காலம் உள்ளதாகவும், எதிர்காலத்தில் கட்சியின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் உறுதியளித்துள்ளார். வினோத் காந்தியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை தொகுதியில் மீண்டும் அமைச்சர் ஆர்.காந்தி திமுக சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார். வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள் என்பதால், இந்தத் திடீர் மாற்றம் அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.
English Summary
Vinod Gandhi Withdraws from TN Assembly Election Minister Gandhi to Contest from Ranipet Again