வாக்குறுதிகள் அனைத்தும் வெற்று அறிவிப்புகளா? நடுரோட்டில் விவசாயிகளை விட்டது யார்?; தி,வேல்முருகன் ஆவேசம்..! - Seithipunal
Seithipunal


''உழவர்களின் நியாயமான கண்ணீருக்கும் கொந்தளிப்பிற்கும் மதிப்பளித்து, பாதிக்கப்பட்ட விவசாயத் தோழர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.'' என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

''தூத்துக்குடி திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள், டிராக்டர்களைக் கொண்டு சாலையை மறித்தும், காய்ந்து கருகிய வாழை மரங்களைச் சாலையில் வீசியும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

அணைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது கடைமடை விவசாய நிலங்களுக்கு உரிய காலத்தில் பாசன நீர் சென்று சேராதது முழுக்க முழுக்க நிர்வாகத்தின் அலட்சியமும் பொறுப்பின்மையுமே ஆகும்.

வாய்க்கால்கள் முறையாகத் தூர்வாரப்படாததும், நீர் பங்கீட்டு அட்டவணை முறையாகப் பின்பற்றப்படாததுமே பல நூறு ஏக்கர் பரப்பளவிலான வாழை பயிர்கள் கண்முன்னே கருகிக் கருகி போனதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

கடன் வாங்கி, வியர்வை சிந்தி வளர்த்த பயிர்கள் கருகிப் போனதால், விவசாயிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்கள் வேடிக்கை பார்த்ததன் விளைவாகவே உழவர்கள் இன்று நடுரோட்டில் இறங்கி போராடும் துயர நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் வெறுமனே வெற்று வாக்குறுதிகளோடு கடந்து போகாமல், ஒவ்வொரு விவசாய நிலத்தையும் வருவாய்த்துறை மற்றும் வேளாண் துறையினர் உடனடியாக கள ஆய்வு செய்து, கருகிய வாழை பயிர்களுக்கு ஏக்கருக்கு குறைந்த பட்சம் இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்.

நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பயிர்க் காப்பீட்டுத் தொகையை எவ்வித இழுத்தடிப்பும் இன்றி உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வாங்கியுள்ள விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும்.

பாசன நீர் முறைப்படுத்தப்படாததற்கும், கடைமடை வரை தண்ணீர் திறந்து விடப்படாததற்கும் காரணமான பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் மீது உரிய துறைசார் விசாரணை நடத்தப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

உழவர்களின் நியாயமான கண்ணீருக்கும் கொந்தளிப்பிற்கும் மதிப்பளித்து, பாதிக்கப்பட்ட விவசாயத் தோழர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.'' எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Velmurugan is furious about who left the farmers in the middle of the road


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->