காவலர் ஆட்சேர்ப்பைத் தாமதப்படுத்துவது ஏன்..? இளைஞர்களின் எதிர்காலத்தை, அரசே சிதைப்பது சரியா?; வேல்முருகன் கேள்வி..!
Velmurugan asks why the recruitment of police officers is being delayed
''வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் இளைஞர்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் மெத்தனப் போக்கை தமிழக அரசு கைவிட்டு, இளைஞர்களின் எதிர்காலத்திற்குரிய உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
''காவலர் ஆட்சேர்ப்பைத் தாமதப்படுத்துவது ஏன்? இளைஞர்களின் எதிர்காலத்தை, அரசே சிதைப்பது சரியா? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டிய காவல்துறையிலேயே ஆயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் கிடக்கின்றன. இதை சரிசெய்ய வேண்டிய அரசு, புதிய காவலர் ஆட்சேர்ப்பு அறிவிப்பைக் கூட காலத்திற்குள் வெளியிட முடியாமல் இருப்பது நிர்வாகத் திறனின்மையின் வெளிப்பாடாகும். காவலர் பணியை நம்பி பல மாதங்களாக உடற்தகுதிப் பயிற்சியும், எழுத்துத் தேர்வுக்கானத் தயாரிப்பும் மேற்கொண்டு வரும் இளைஞர்களின் உழைப்பை, இந்த அரசு மதிக்கவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருப்பவர்களின் கனவுகளை, அரசின் மெத்தனமான செயல்பாடு சிதைத்துக் கொண்டிருக்கிறது. குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மக்கள் அச்சம் தெரிவிக்கும் சூழலில், காவல்துறையை வலுப்படுத்த வேண்டிய அரசு, காலிப்பணியிடங்களை நிரப்புவதில்கூட அக்கறை காட்டாதது ஏன்?
காவல்துறைக்குத் தேவையான மனிதவளத்தை உருவாக்காமல் பாதுகாப்பான தமிழ்நாட்டைப் பற்றி பேசுவதற்கு அரசுக்கு எந்தத் தார்மீக உரிமையும் இல்லை. ஆட்சேர்ப்பு நடைமுறையை விரைந்து முடிக்க முடிந்தும், அதை இழுத்தடிப்பதால் வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் இளைஞர்களே பாதிக்கப்படுகின்றனர்.
வயது வரம்பைக் காரணமாகக் கொண்டு, பலர் தங்களுக்குரிய வாய்ப்புகளை இழக்கும் நிலையை அரசே உருவாக்கியுள்ளது வேதனைக்குரியது. இளைஞர்கள் அதிகம் கொண்ட ஆட்சி நிர்வாகத்தில், இளைஞர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது என்பது அவமானகரமானது. எனவே, நிலுவையில் உள்ள காவலர் ஆட்சேர்ப்பின் அனைத்து நடைமுறைகளையும் உடனடியாக நிறைவு செய்து முடிவுகளை வெளியிட வேண்டும். அதேநேரத்தில், புதிய காவலர் ஆட்சேர்ப்பு அறிவிப்பைத் தாமதமின்றி வெளியிட வேண்டும்.
அதற்கு இயலாத சூழல் இருப்பின், அரசின் அலட்சியத்திற்காக இளைஞர்கள் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காக, வயது வரம்பில் உரிய தளர்வை அறிவிக்க வேண்டும். வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் இளைஞர்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் மெத்தனப் போக்கை தமிழக அரசு கைவிட்டு, இளைஞர்களின் எதிர்காலத்திற்குரிய உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Velmurugan asks why the recruitment of police officers is being delayed