இறந்தவர்களுக்கு நியாயம் செய்வதும், உயிருடன் இருக்கும் குடும்பத்தினருக்கு நீதி செய்வதும் தான் அறம் - வைரமுத்து!
Vairamuthu Karur Stampede TVK Vijay
கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற த.வெ.க தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயர சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது கரூரில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பதிவில் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அதில், “கரூரில் உயிரிழந்த 41 குடும்பங்களின் நிலைமையை ஆய்வு செய்யும்போது, வேலை செய்யக்கூடியவர்கள் மற்றும் கல்வி கற்கும் நிலையில் உள்ளவர்களை அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வாய்ப்பு மூலம் ஆதரிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
அவரது கருத்துப்படி, பலியானோர் பெரும்பாலும் அடித்தட்டு மற்றும் நடுத்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் குடும்பங்களுக்கு வேலை மற்றும் கல்வி மட்டுமே நிலையான ஆதரவாக இருக்கும்.
“இறந்தவர்களுக்கு நியாயம் செய்வதும், உயிருடன் இருக்கும் குடும்பத்தினருக்கு நீதி செய்வதும் தான் அறம். நீங்கள் சமர்ப்பிக்கும் அறிக்கை பட்டழிந்தோரின் கண்ணீரை துடைக்கும் கருவியாக அமைய வேண்டும்” என நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்திடம் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
English Summary
Vairamuthu Karur Stampede TVK Vijay