பெரும்பான்மையை நெருங்கும் தவெக; 111 தொகுதிகள் கைவசம்; விஜய்யின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன ..?
TVK Secures 111 Seats
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதுவரை தவெக 111 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அடுத்தப்படியாக 65 தொகுதிகளில் திமுகவும், மூன்றாம் இடத்தில் அதிமுக 58 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 233 தொகுதிகளில் போட்டியிட்டது. எடப்பாடி தொகுதியில் மட்டும் தவெக வேட்பாளர் வாபஸ் பெற்ற நிலையில், அங்கு அவர் சுயேட்சையாக போட்டியிட்டவருக்கு தவெக ஆதரவு அளித்தது.
இந்நிலையில், மதியம் 02 மணி நேர நிலவரப்படி, தவெக 111 தொகுதிகளிலும், திமுக 66 தொகுதிகளிலும், அதிமுக 58 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. தவெக ஆட்சியை கைப்பற்ற இன்னும் சில இடங்களே தேவைப்படுகின்றன. இந்நிலையில், தூத்துக்குடி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட ஸ்ரீநாத் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 30-ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் வேட்பாளர்களுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது 'வெற்றி பெற்றதும் வேறு எங்கும் செல்லாமல் எந்நேரமாக இருந்தாலும் பனையூருக்கு வந்துவிட வேண்டும். உங்களுக்காக நான் காத்திருப்பேன்'. என்று கூறியிருந்தார். அதன்படி தற்போது நீலாங்கரை இல்லத்தில் விஜய் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
முன்னதாக, மற்ற கட்சிகள் தவெக வேட்பாளர்களை குதிரை பேரத்தின் அடிப்படையில் இழுக்காமல் இருக்க, தவெக முனைப்புக் காட்டி வருகிறது. அதற்காக தவெக சார்பில் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வெற்றிபெற்ற வேட்பாளர்களுடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு நடத்த திட்டமிட்டு விடுதியை முன்பதிவு செய்துள்ளனர்.
அங்கு வெற்றி பெறும் வேட்பாளர்களை அங்கு தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, வேட்பாளர்களை சிதறாமல் அந்த இடத்துக்கு அழைத்து வரும் முக்கிய பொறுப்பை ஆதவ் அர்ஜுனாவிடம் விஜய் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தவெக தலைவர் விஜயின் நீலாங்கரை வீட்டுக்கு நடிகை த்ரிஷா வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.