அதிமுக நிர்வாகி தற்கொலை செய்த சோகம்...! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்திற்கு ரூ.55 லட்சம் நிதியுதவி அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி...!
Tragedy over AIADMK executive suicide Edappadi Palaniswami announces 55 lakh financial assistance tearful family
தஞ்சாவூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. ஒற்றுமையை வலியுறுத்தி கட்சியின் நிர்வாகி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் பகுதியைச் சேர்ந்த பூக்கடை மகேந்திரன், அ.தி.மு.க. வர்த்தக அணி மாவட்ட இணைச் செயலாளராக செயல்பட்டு வந்தார். கட்சியில் நிலவி வரும் உள்கட்சி கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சமூக வலைதளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்ட மகேந்திரன், அ.தி.மு.க. மீண்டும் ஒருங்கிணைந்து வலிமையான இயக்கமாக உருவெடுக்க வேண்டும் என்றும், கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மேலும், தனது மறைவுக்குப் பின்னரும் இயக்கம் வலுப்பெற்று, ஒற்றுமையின் பாதையில் பயணிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் அந்த காணொளியில் குறிப்பிட்டிருந்தார்.இதனைத் தொடர்ந்து திருப்பனந்தாள்–ஆடுதுறை சாலையில் அவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
உயிரிழந்த மகேந்திரனின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த துயரச் செய்தியைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று மகேந்திரனின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது, "உங்கள் குடும்பத்திற்கு இயக்கம் முழு துணையாக இருக்கும்; எந்தவித கவலையும் கொள்ள வேண்டாம்" என்று உறுதியளித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகேந்திரனின் ஒரு வயது மகளின் பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்து கல்விச் செலவுகளையும் அ.தி.மு.க. ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்தார்.
மேலும், கட்சியின் சார்பில் ரூ.30 லட்சமும், தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ரூ.25 லட்சமும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.இதேபோன்ற உணர்ச்சிவசப்பட்ட முடிவுகளை எந்தக் கட்சித் தொண்டரும் எடுக்கக் கூடாது என்றும் அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
இதனிடையே, வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், மகேந்திரனின் மறைவு செய்தி தமக்கு ஆழ்ந்த துயரத்தையும் மனவேதனையையும் ஏற்படுத்தியதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பல்வேறு சோதனைகளை கடந்து வெற்றிப் பாதையில் பயணித்த மாபெரும் இயக்கம் என்றும், எந்தச் சூழலிலும் தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு இத்தகைய முடிவுகளை எடுக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மகேந்திரனின் மனைவி முனீஸ்வரி மற்றும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள அவர், குடும்ப நல உதவியாக மொத்தம் ரூ.55 லட்சம் வழங்கப்படும் என்றும், அவரது மகளின் முழு கல்விச் செலவுகளையும் அ.தி.மு.க. ஏற்றுக்கொள்ளும் என்றும் அறிவித்துள்ளார்.இந்த சம்பவம் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், கட்சியின் எதிர்கால ஒற்றுமை குறித்து புதிய விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Tragedy over AIADMK executive suicide Edappadi Palaniswami announces 55 lakh financial assistance tearful family