இ20 பெட்ரோலுக்கு எதிராக போக்குவரத்து சங்கங்கள் போர்க்கொடி; ஆகஸ்ட் 04-இல் நாடாளுமன்றம் நோக்கி பேரணி..!
Rally towards Parliament on August 4th against E20 petrol
இ20 பெட்ரோல் விற்பனையை எதிர்த்து, போக்குவரத்து சங்கங்கள் வரும், ஆகஸ்ட் 04-ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல திட்டமிட்டுள்ளன.
நாடு முழுவதும் 20% எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் விற்பனை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இந்நிலையில், இது குறித்து டெல்லி டாக்சி மற்றும் சுற்றுலாப் போக்குவரத்து, சுற்றுலா ஆபரேட்டர்கள் சங்க தலைவர் சஞ்சய் சாம்ராட் கூறியுள்ளதாவது;
எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை எதிர்த்தும், அதனை திரும்பப் பெற கோரியும் நாடாளுமன்றம் நோக்கி ஆகஸ்ட் 04-இல் பேரணி செல்ல திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்த விவகாரத்தில் நித்திரையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை விழிக்க செய்யவுள்ளதாகவும், எத்தனால் கலந்த பெட்ரோல் காரணமாக தேசம் முழுவதும் வாகனங்கள் பழுதடைவதாக கூறியுள்ளார்.

அத்துடன், இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை என்றும், எங்களது பேரணி போராட்டத்துக்கும் இ20 ஜனதா கட்சி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அல்லது வேறு எந்தவொரு அமைப்புக்கும் தொடர்பு இல்லை என்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அகில இந்திய மோட்டார் போக்குவரத்து சங்கத்தின் தேசிய தலைவர் ஹரிஷ் சபர்வால் மேலும் கூறியதாவது:
வாகன பயன்பாட்டாளர்களிடம் இ20 பெட்ரோல் பயன்பாடு திணிக்கப்படக்கூடாது என்றும், விருப்பத்தின் அடிப்படையில் அது வழங்கப்பட வேண்டும் என்று கூறியதோடு, இப்போது அது மாதிரியான விருப்ப தேர்வு எதுவும் இல்லை என்று சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

அத்துடன், இந்த விவகாரம் சார்ந்து நாடாளுமன்றம் நோக்கி மேற்கொள்ள உள்ள பேரணியை ஆதரிப்பதாகவும், இப்போதைக்கு தேசிய அளவிலான வேலைநிறுத்தம் மேற்கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மேற்கொண்ட போராட்டத்துக்கு வெற்றி கிடைத்தது. இதனை தொடர்ந்து சமூக வலைதளத்தில் இ20 ஜனதா கட்சி உதயமாகியுள்ளது. இதற்கும் தற்போது ஆதரவு பெருகி வரும் நிலையில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி அறிவிக்கப்பட்டுள்ளது.
எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை சார்ந்த அரசின் கொள்கை முடிவு சர்ச்சையை எழுப்பியுள்ளது. இது வாகனத்தின் மைலேஜ், எந்திர கோளாறு உள்ளிட்ட கேள்விகள் வாகன பயன்பாட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனாலும், இ20 பெட்ரோல் பாதுகாப்பானது, சுத்தமானது மற்றும் வேளாண் மக்கள் இதன் மூலம் ஆதாயம் பெறுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
English Summary
Rally towards Parliament on August 4th against E20 petrol